ADDED : டிச 15, 2025 03:07 AM

சென்னை: உலக கோப்பை ஸ்குவாஷ் பைனலில் அசத்திய இந்திய அணி 3-0 என, ஹாங்காங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னையில், உலக கோப்பை ஸ்குவாஷ் 5வது சீசன் நடந்தது. லீக் சுற்றில் சுவிட்சர்லாந்து, பிரேசிலை வீழ்த்திய இந்தியா, காலிறுதியில் தென் ஆப்ரிக்கா, அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய எகிப்தை வென்றது.
நேற்று நடந்த பைனலில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்தித்தது. முதல் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, ஹாங்காங்கின் கா யி லீ மோதினர். இதில் ஜோஷ்னா 3-1 (7-3, 2-7, 7-5, 7-1) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இரண்டாவது போட்டியில் இந்தியாவின் அபே சிங் 3-0 (7-1, 7-4, 7-4) என, ஹாங்காங்கின் டிஸ் குவான் லாவை தோற்கடித்தார்.
மூன்றாவது போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங் 3-0 (7-2, 7-2, 7-5) என ஹாங்காங் கின் ஹோ டொமாட்டோ டிஸ்-லோக்கை வென்றார்.
முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

