மீண்டும் மல்யுத்த போராட்டம்: சாக்சி, பஜ்ரங் மிரட்டல்
மீண்டும் மல்யுத்த போராட்டம்: சாக்சி, பஜ்ரங் மிரட்டல்
ADDED : பிப் 15, 2024 06:16 AM

புதுடில்லி: ''இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக மீண்டும் போராடுவோம்,'' என சாக்சி மாலிக் தெரிவித்தார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக இருந்த பா.ஜ., எம்.பி., பிரிஜ்பூஷண் ஷரண் சிங் மீது, பாலியல் புகார் கூறப்பட்டது. இவரை கைது செய்ய வேண்டும் என இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் வினேஷ் போகத், சாக் சி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராடினர்.
தவிர, நிர்ணயித்த காலத்திற்குள் தேர்தல் நடத்தாததால், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு, கடந்த 2023, ஆக. 25ல் சர்வதேச அமைப்பு (யு.டபிள்யு.டபிள்யு.,) தடை விதித்தது. இதனிடையே புதிய தலைவராக, பிரிஜ்பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வானார். இதற்கு பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்சி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவ்விஷயத்தில் தலையிட்ட மத்திய அரசு, மல்யுத்த கூட்டமைப்பை கடந்த டிச. 27ல் சஸ்பெண்ட் செய்தது. மல்யுத்தத்தை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட தற்காலிக குழு அமைக்கப்பட்டது. தற்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதான தடையை யு.டபிள்யு.டபிள்யு., நீக்கியது.
சாக் சி மாலிக் வெளியிட்ட செய்தி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதான தடையை நீக்குவதற்கு தவறான வழிகளை சஞ்சய் சிங் பயன்படுத்தியுள்ளார். எங்களது போராட்டம் தற்காலிகமாக தான் நிறுத்தப்பட்டுள்ளது. மல்யுத்தத்தில் இருந்து நான் ஓய்வு பெற்றாலும், பிரிஜ்பூஷண், அவரது ஆதரவாளர்கள் வீராங்கனைகளுக்கு தொல்லை கொடுப்பதை, மல்யுத்த சங்கத்தை நிர்வகிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டேன். மத்திய அரசு எங்களுக்கு உறுதி தர வேண்டும். இல்லை எனில் மீண்டும் போராட்டத்தை துவக்குவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

