கேரளா நர்சுக்கு மரண தண்டனை அளிக்க ஏமன் அதிபர் ஒப்புதல்; காப்பாற்ற இந்தியா தீவிர முயற்சி
கேரளா நர்சுக்கு மரண தண்டனை அளிக்க ஏமன் அதிபர் ஒப்புதல்; காப்பாற்ற இந்தியா தீவிர முயற்சி
UPDATED : டிச 31, 2024 02:33 PM
ADDED : டிச 31, 2024 01:55 PM

புதுடில்லி: 'கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற, ஏமன் அதிபர் ரஷாத் அல் அலிமி உத்தரவிட்டுள்ளார். இதற்கு, 'பிரியாவின் குடும்பத்தினர் கவலையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அரசு முடிந்த அளவு முயற்சி செய்யும்' என இந்தியா பதில் அளித்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. கடந்த 2017 ம் ஆண்டு ஏமனில் நர்சாக பணியாற்றிய போது, அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அது முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரியாவின் தாய் மகளை மீட்க போராடி வருகிறார். ஏமன் நாட்டு சட்டப்படி ( இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடாக பணம் வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும்) எனும் வழக்கம் உள்ளது. இதனை பயன்படுத்தி, நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற, ஏமன் அதிபர் ரஷாத் அல் அலிமி உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரியாவின் குடும்பத்தினரின் கவலை என்ன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த விஷயத்தில் அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.