ADDED : ஜன 25, 2026 03:06 AM

லக்னோ: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர்மட சங்கராச்சாரியாருக்கும் இடையே சரியான உறவு இல்லை. தை அமாவாசை அன்று நடந்த ஒரு விஷயம், உ.பி., அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் என அழைக்கப்படுபவர், ஜோதிர்மட சங்கராச்சாரியார். இவர், தன் ஆதரவாளர்கள் 200 பேருடன் தை அமாவாசையான கடந்த 18ம் தேதி, பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராட வந்தார். ஆனால், உ.பி., போலீசார் இவரை தடுத்து நிறுத்திவிட்டனர். காரணம், சங்கராச்சாரியாருடன் வந்த 200 பேருக்கு நீராட அனுமதி இல்லை; அத்துடன், இவருடைய ரதம், நதியின் கரைக்கு கொண்டு வரவும் அரசு அனுமதி தரவில்லை.
இது, சங்கராச்சாரியாருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உடனே, அவர், 'முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் இதன் பின்னணியில் உள்ளார்; என்னை அவமானப்படுத்தி விட்டனர்' என குற்றம் சாட்டினார். உடனே, 'சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த், ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியாரே கிடையாது; அவரே, தன்னை மடத்தின் தலைவராக நியமித்துக் கொண்டார். இவர் மடத்தின் சங்கராச்சாரியாராக பதவி ஏற்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஒடிசாவின் புரி கோவர்த்தன் மடத்தின் தலைவர், சுவாமி நிஸ்சலானந்த் தொடர்ந்த வழக்கில், இது தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது' என, உ.பி., அரசு தரப்பு சொல்கிறது.
இந்த சண்டைக்கு பின், சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த், பா.ஜ.,வையும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் கண்டபடி விமர்சித்து வருகிறார்; உடனே, எதிர்க்கட்சிகளான காங்கிரசும், சமாஜ்வாதி கட்சியும் இவருக்கு ஆதரவு அளித்து விட்டன. இன்னொரு பக்கம் உ.பி., துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, இந்த சங்கராச்சாரியாருக்கு ஆதரவாக பேசி உள்ளார்; இது உ.பி., - பா.ஜ., தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
'சுவாமி அவிமுக்தேஸ்வரானந்துக்கு ஆதரவாக பேசினால் கட்சியில் பிரச்னை; எதிர்த்து பேசினால், எங்களை ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் என பேசுவர். என்ன செய்வது என தெரியாமல், திண்டாடிக் கொண்டிருக்கிறோம்' என்கின்றனர் உ.பி., - பா.ஜ.,வினர்.

