UPDATED : பிப் 01, 2026 02:14 AM
ADDED : பிப் 01, 2026 02:12 AM

புதுடில்லி: டில்லி காங்., அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டம் குறித்து, கேலியும் கிண்டலுமாக பேசப்படுகிறது. சில நாட்களுக்கு முன், காங்., முன்னாள் தலைவர் ராகுல் தலைமையில், ஹரியானாவின் குருஷேத்திரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் காங்., தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு மிகவும் சரியான நேரத்தில் வந்தார், ராகுல். அவரது உடையைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். காரணம், வெள்ளை நிறத்தில் ஜப்பானிய உடை அணிந்திருந்தாராம். 'அது என்ன?' என்று கூட்டத்தில் விவரித்தாராம்.
'நான், 'ஜி ஜிட்சு' எனப்படும் ஜப்பானிய தற்காப்பு கலையை கற்றுள்ளேன். இதற்கு, மென்மையான கலை எனவும் ஒரு பெயர் உண்டு. வலிமையைப் பயன்படுத்தாமல், எதிரியின் சக்தியை திருப்பி பயன்படுத்தி துாக்கி எறிதல், மூட்டு பூட்டுதல் போன்ற நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தற்காப்பு கலை, உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 'ஜூடோ, அக்கிடோ' போன்ற தற்காப்பு கலைகளுக்கு அடிப்படையே இந்த ஜி ஜிட்சு தான்' என, விபரமாக கூறினாராம் ராகுல்.
அத்துடன், 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் தினமும் உடற்பயிற்சி செய்கின்றனர்; நாமும், அதே போல இந்த தற்காப்பு கலையான ஜி ஜிட்சுவை கற்று, தினமும் பயிற்சி செய்ய வேண்டும்' எனக் கூறியதுடன், தன் உடம்பை எப்படி, 'பிட்' ஆக வைத்துள்ளார் என்பதையும் விளக்கினாராம்.
கூட்டம் முடிந்த பின், 'காங்கிரஸ் எப்படி வெற்றி வேண்டும் என்பதற்கு பதிலாக, இப்படி தேவையில்லாத விஷயங்களைப் பேசுகிறாரே ராகுல்... ஹரியானாவில் குத்துச்சண்டை தான் முக்கிய விளையாட்டு... பல உலகத்தரம் வாய்ந்த குத்துச்சண்டை வீரர்களை, நாட்டுக்கு ஹரியானா அளித்துள்ளது. அதை விட்டு இந்த ஜப்பானிய கலையை யார் கற்றுக் கொள்வர்... ராகுல், சிரிப்பு நடிகர் போல செயல்படுகிறாரே' என வருத்தப்பட்டனராம் தொண்டர்கள்.

