காஷ்மீரில் 'இஸட்' வடிவ சுரங்கப்பாதை பிரமாண்டம் ! நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
காஷ்மீரில் 'இஸட்' வடிவ சுரங்கப்பாதை பிரமாண்டம் ! நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
ADDED : ஜன 14, 2025 01:41 AM

ஸ்ரீநகர்: காஷ்மீரில், 'இஸட்' வடிவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சோனாமார்க் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு நேற்று அர்ப்பணித்தார்.
ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் 'இஸட்' வடிவ சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் - - லே இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், 2,700 கோடி ரூபாய் செலவில் 6.5 கி.மீ., துாரத்திற்கு கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதை, கடல் மட்டத்தில் இருந்து 8,652 அடி உயரத்தில் உள்ளது.
இருவழிப் பாதையாக, தலா 33 அடி அகலம் உடைய, 'ஜிக் -- சாக்' வளைவுகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையில், அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ., வேகத்தில், ஒரு மணி நேரத்திற்கு 1,000 வாகனங்கள் செல்ல முடியும்.
அவசர கால தேவைகளுக்காக, இந்த சுரங்கப்பாதையின் பக்கவாட்டிலேயே 25 அடி அகலத்தில் மற்றொரு சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட சோனாமார்க் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு நேற்று அர்ப்பணித்தார்.
கடுமையான பருவநிலைகளை பொருட்படுத்தாமல் சுரங்கப் பாதை கட்டுமானத்துக்கு அயராது உழைத்த தொழிலாளர்களை சந்தித்து, பிரதமர் மோடி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், ஜம்மு - காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துவக்க விழாவின் போது பேசிய முதல்வர் ஒமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்த ஸ்தை திருப்பி அளிக்கும்படி வலியுறுத்தினார்.
அதன் பின் பிரதமர் மோடி பேசியதாவது:
நீங்கள் பிரதமர் மோடியை நம்ப வேண்டும். நான் அளித்த வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றி உள்ளேன். எல்லாவற்றுக்கும் சரியான நேரம் உள்ளது. அந்த நேரம் வரும்போது எல்லாம் சரியாக நடக்கும்.
ஜம்மு - காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. அதன் தாக்கத்தை சுற்றுலா துறையில் கண்கூடாக காண்கிறேம். வளர்ச்சியில் காஷ்மீர் புதிய அத்தியாயத்தை எழுத துவங்கிஉள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.