ஆக 07, 2026 10:25 AM
ஆக 07, 2026 10:25 AM

உலகளவில் தொழில்துறை வளர்ச்சி, எரிசக்தி உற்பத்தி, மருந்துகள், உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் துறையாகவே வேதியியல் பொறியியல் கருதப்படுகிறது. வேதியியல் விஞ்ஞானம் மற்றும் பொறியியல் நுணுக்கங்களை ஒருங்கிணைத்து, மூலப்பொருள்களை தொழில்துறை பயன்பாடுக்கேற்ற பொருட்களாக மாற்றும் செயல்முறைதான் இத்துறையின் முதன்மை நோக்கம்.
படிப்புகள்
எதிர்வினைகள் பொறியியல், வெப்ப இயக்கவியல், திரவ இயக்கவியல், செயல்முறை கட்டுப்பாடு, நிறை பரிமாற்றம் போன்ற தொழில்நுட்பங்களை இளநிலை பட்டப்படிப்பில் கற்றுக் கொள்ள முடியும்.
முதுநிலை படிப்பில், செயல்முறை வடிவமைப்பு, ஆற்றல் பொறியியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிர்வேதியியல் பொறியியல் போன்ற மேம்பட்ட துறைகள் கற்பிக்கப்படுகின்றன.
தகுதி
பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர ஜே,இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் எழுத வேண்டும். தமிழகத்தில் டி.என்.இ.ஏ., கலந்தாய்வு வாயிலாக சிக்ரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் சேர முடியும்.
முதுநிலை படிப்புகளில் (எம்.இ.,/எம்.டெக்.,) சேர பி.இ., அல்லது பி.டெக்., வேதியியல் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 'கேட்' தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர வாய்ப்பு உள்ளது.
வேலை வாய்ப்புகள்
பெட்ரோ கெமிக்கல், உரங்கள், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், பாலிமர், உயிரி தொழில்நுட்பம், நீர் சுத்திகரிப்பு, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் ஆகிய துறைகளில் வேதியியல் பொறியியலாளர்களுக்கு மிகுந்த தேவை உள்ளது. இந்தியா மற்றும் உலகளவில் வேதியியல் தொடர்புடைய முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளது.
எதிர்கால வளர்ச்சி
ஹைட்ரஜன் எரிபொருள், பசுமை ஆற்றல், கார்பன் பிடிப்பு தொழில்நுட்பம், பயோபிளாஸ்டிக்ஸ் மற்றும் நிலையான செயல்முறை பொறியியல் ஆகியவை வேதியியல் பொறியியலில் புதிய முன்னேற்றங்களை உருவாக்குகின்றன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, செயல்முறை கண்டுபிடிப்பு மற்றும் ஸ்மார்ட் உற்பத்தி ஆகிய துறைகளும் வளர்ச்சி பாதையில் உள்ளன.
உலகளவில் சுற்றுச்சூழல் சிந்தனைகள் முக்கியத்துவம் பெறும் நிலையில், கழிவுகளை சுத்திகரிக்கும் தொழில்நுட்ப மேம்பாடுகள், பசுமை உற்பத்தி முறைகள் ஆகியவற்றில் வேதியியல் பொறியியலாளர்கள் முன்னணி பங்கு வகிக்கிறார்கள். இதனால், வேதியியல் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு நீடித்த மற்றும் உயர்ந்த தொழில்வாய்ப்புகள் நிலவுகின்றன.
