டிஜிட்டல் டிமென்சியா தொழில்நுட்பத்தால் குறையும் நினைவாற்றல்
டிஜிட்டல் டிமென்சியா தொழில்நுட்பத்தால் குறையும் நினைவாற்றல்
மே 04, 2026 04:15 PM
மே 04, 2026 04:15 PM

இன்று எல்லாவற்றையும் ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது. சின்ன, சின்ன விஷயங்களுக்கும் கூகுளை நம்பி, சொந்த நினைவகத்தை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்கிறோம்.
இதனால், நினைவாற்றல், கவனம், சிந்திக்கும் திறன் போன்ற மூளையின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கிறது. இந்த நிலையே 'டிஜிட்டல் டிமென்சியா' எனும் மறதிநோய் என்கிறார், மனநல மருத்துவர் பவித்ரா மோனி.
"நண்பர்களின் பிறந்த நாள், மொபைல் எண், முகவரிகள் போன்ற மிகச்சிறிய தகவலைக் கூட நினைவில் வைப்பதில்லை. சொந்த வீட்டிற்கு வழி கேட்டாலும், லோக்கேஷன் ஷேர் பண்ணி விடுகிறோம்.
சிறிய கணக்குகளுக்கும் கூட கால்குலேட்டர். சாதாரண விஷயங்களைக்கு கூட 'சாட்ஜிபிடி', 'ஜெமினி' போன்றவற்றை நாடுகிறோம். தேடுபொறிகளை அதிகம் சார்ந்திருப்பதால் ஆழமாக சிந்திக்கும் ஆற்றல் குறைவதாக, ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன," என்கிறார் டாக்டர் பவித்ரா.
டிவியில் ஒரு படத்தை முழுமையாக பார்க்கும் பொறுமை குறைந்து விட்டதை நம்மில் பலர் தினமும் உணர்கிறோம். சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவதால், ஒரு விஷயத்தில் மனதை முழுமையாக செலுத்தும் திறன் குறைந்து விட்டதை உறுதிப்படுத்துகிறார் டாக்டர் பவித்ரா.
"இன்ஸ்டா ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்றவற்றை அதிகம் பார்த்து பழகியவர்களுக்கு இரண்டு மணி நேரம் முழு படத்தை பார்ப்பதே சலிப்பாக உள்ளது. கவனச்சிதறலால் நீண்ட நேரம் ஒருமுகப்படுத்தி ஒரு விஷயத்தை செய்ய முடியவில்லை.
சிறிய விஷயங்களையும் மறத்தல், கவனம் செலுத்த முடியாமை, மனச்சிதறல், சிந்தனை திறன் குறைதல் போன்றவை டிஜிட்டல் டிமென்சியா அறிகுறிகள்.
இது நிரந்தர நோய் அல்ல. வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதன் வாயிலாக, மூளையின் செயல்பாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்," என்கிறார் அவர்.
மூளையை பத்திரமாக்க இதோ சில 'டிப்ஸ்'
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை 'கேட்ஜெட் ப்ரீ' நேரமாக ஒதுக்க வேண்டும்.
கூடுமானவரை, முக்கிய விஷயங்களை நினைவில் வைக்க முயற்சிக்க வேண்டும். தேவைப்பட்டால், நோட்டிலும் குறிப்பெடுத்து வைக்கலாம்.
எழுதும் போது இன்னும் மனதில் ஆழமாக பதியும். நினைவாற்றலும் அதிகரிக்கும்.
சிறிய விஷயங்களுக்கெல்லாம் உடனே கூகுளை தேடாமல், சுய சிந்தனைக்கும் நேரம்கொடுங்கள்.
மூளைக்கு வேலை கொடுக்கும், குறுக்கெழுத்து, கிராஸ்வேர்ட், பசுல் போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபடலாம்.
குழந்தைகளுக்கு போன் வேண்டாம்
ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சியில் 90 சதவீதம் ஐந்து வயதுக்குள் நடக்கிறது. குழந்தைகளின் ஆரோக்கியமான உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை உறுதி செய்ய, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஸ்கிரீன் டைம் குறைவாகவோ அல்லது அறவே இல்லாமலோ வைத்திருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.
குழந்தைகளிடம் அதிகரிக்கும் ஸ்கிரீன் பயன்பாடு, மூளையின் கட்டமைப்பையே மாற்றியமைக்கிறது. கவனச்சிதறல், பேசுவதில் தாமதம், மறதி மற்றும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வெகுவாக பாதிக்கிறது. மூளை மற்றும் உடல் இயக்கம் சார்ந்த விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். முன்மாதிரியாக, பெற்றோர்களும், குழந்தைகள் முன்னிலையில் போன் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.
