மே 12, 2024 12:00 AM
மே 12, 2024 12:00 AM

1987ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று 37 ஆண்டுகளை கடந்துள்ள நேஷனல் மாடல் பள்ளிகளில் ஒரு கொள்கையை தீவிரமாக பின்பற்றுகிறோம். மாணவர்களை எந்த காரணத்தைக் கொண்டும் ஒப்பீடு செய்யக்கூடாது என்பதே அந்த கொள்கை!
ஒரு மாணவரது தற்போதைய செயல்பாடுகளை, அவரது முந்தைய செயல்பாடுகளுடன் வேண்டுமானால் ஒப்பிடலாமே தவிர, ஒரு மாணவரது செயல்பாடுகளை மற்றொரு மாணவருடன் ஒப்பீடு செய்வது ஒருபோதும் கூடாது. ஏனெனில், ஒவ்வொரு மாணவரும் பிரத்யேக திறன் படைத்தவர்கள்.
மதிப்பெண் மட்டும் போதாது
பொதுதேர்வுகளிலும், நுழைவுத் தேர்வுகளிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடைபெறுகிறது. இத்தகைய சூழலில், மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தருவது தவிர்க்க முடியாதது. எனினும், அதிக மதிப்பெண் பெறுவது மட்டும் இன்றைய காலகட்டத்திற்கு போதாது. உலக அறிவை வளர்த்துக்கொள்வது மிக அவசியம். ஆகையால், இதர திறன் வளர்ப்புகளுக்கும், வாழ்க்கைக்கு தேவையானவற்றை கற்றுக்கொடுப்பதற்கும் நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். தலைமைப் பண்புகளை வளர்ப்பதிலும், மேடையில் தயக்கமின்றி பேசுவதற்கு குழந்தைகளை தயார்ப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறோம்.
எங்கள் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் பலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உயர்நீதிமன்ற நீதிபதி என நாட்டிலுள்ள பல்வேறு உயர்பதவிகளிலும் பணிபுரிகின்றனர். அவர்களை சிறப்பு விருந்தினராகக் கொண்டு, மாதம் ஒரு முறை சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்துகிறோம். அதன்வாயிலாக, தற்போதைய மாணவ, மாணவியர்களுக்கு உத்வேகத்தை அதிகரிக்கிறது. எதிர்காலத்தை சிறப்பானதாக்கிக்கொள்வதற்கான அடித்தளமாகவும் அத்தகைய நிகழ்வுகள் அமைகின்றன.
தோல்வி ஓர் அங்கம்
இன்றைய மாணவ, மாணவியர் பலர் தோல்வியைக் கண்டு துவண்டுவிடுகின்றனர். தோல்வி என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம். தோல்வி அடைந்துவிட்டால் அதோடு வாழ்க்கை முடிவடைந்து விடுவதில்லை. அடுத்தத்த கட்டங்களில் வெற்றி வரும்... அதுவரை பொறுமை காக்க வேண்டுமே தவிர, மனம் தளர்ந்துவிடக்கூடாது.
இன்று ஏராளமான தகவல்கள் ஆன்லைனில் கொட்டிக்கிடக்கும் நிலையில், ஆசிரியர்கள் என்பவர் பாடம் நடத்துபவராக மட்டுமில்லாமல், வழிகாட்டும் பணியை அதிகம் மேற்கொள்ள வேண்டி உள்ளது. மொபைல், டேப், லேப்டாப் ஆகியவற்றை எவ்வாறு, எதற்கு பயன்படுத்தவேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பதும் இன்று அவசியமாகிறது.
நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்கும் சூழலை எளிதாக்குகின்றன. ஆனால், அனைத்து மேம்பட்ட தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்ள பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்களுக்கு அவசியம் தேவையான, வாழ்க்கைக்கு தேவையான தொழில்நுட்பங்களை மட்டும் கற்றுகொடுத்தால் போதும்.
-மோகன் சந்தர், தலைவர், நேஷனல் மாடல் பள்ளி குழுமங்கள்.