நவ 29, 2011 12:00 AM
நவ 29, 2011 12:00 AM
இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி தற்போது வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. இதற்கு பல்வேறு புதிய துறைகள் பெருகியது காரணம். தற்போதுள்ள இளைஞர்களும் குறைந்தபட்ச அடிப்படை கல்வியை முடித்தவர்களாகவே உள்ளனர்.
வேலை எந்தளவுக்கு பெருகியுள்ளதோ, அதே அளவிற்கு போட்டியும் பெருகிவிட்டது. 100 இடங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது என்றால், 10 ஆயிரம் பேர் நேர்காணலுக்கு வருகின்றனர். எனவே 10 ஆயிரம் பேரில் இருந்து 100 பேருக்குள் வருவது எளிதான விஷயமல்ல. நாம் வேலைக்கு செல்லவிருக்கும் நிறுவனம் எதிர்பார்க்கும் திறமையை வளர்த்துக்கொண்டு, நேர்காணலை சந்தித்தால் வேலை பெறலாம்.
இன்றைய இளைஞர்கள் வேலை தேடுவதில் பல விதமாக செயல்படுகின்றனர். சிலர் ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என, படிப்புக்கு சம்மந்தமில்லாத வேலைக்கு செல்கின்றனர். சிலர், படித்த துறையிலேயே வேலைக்கு போகவேண்டும் என நாட்களை கடத்தி கொண்டிருப்பர். இதனால் எந்த துறையில் பணியில் சேர்வது என்ற குழப்பங்கள் அதிகமாகவே ஏற்படுகின்றன. படித்து முடித்த சில ஆண்டுகளிலேயே மூன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் பணி மாறியவர்களும் உண்டு.
தங்களின் திறன் எது என முதலில் கண்டறிந்து, பணிகளை தேர்வு செய்யலாம். அது கல்வியினால் பெற்றதாகவோ, இயற்கையாக அமைந்ததாகவோ இருக்கலாம். ஒரு துறை சார்ந்த பணியில் ஈடுபட முடிவு செய்து விட்டால், ஏற்கனவே அத்துறையில் இருப்பவர்களிடம் யோசனை கேட்கலாம்.
பலரும், வேலை இழப்பதற்கு காரணம், பணிபுரியும் துறையை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளாதது மற்றும் ஈடுபாட்டோடு வேலை பார்க்காதது ஆகியவையே காரணம். துறை சார்ந்த புதிய திறன்களை மேம்படுத்திக்கொள்ள தயங்கக் கூடாது. உங்களிடம் இருந்து அதிகம் வேலை வாங்கலாம் என்ற மனநிலை, நிறுவனத்திடம் நீடிக்கும் வரை மட்டுமே, அந்நிறுவனம் உங்களை பணியில் தொடர அனுமதிக்கும்.
எங்கு சம்பளம் அதிகம் கிடைக்கிறது என்பதைப் பார்த்து பணியில் சேர்வதை விட, எந்த துறையில் சேர்ந்தால் அதிக காலம் வரை பணியாற்ற முடியும் என பார்த்து அதில் சேர்வது நல்லது. பணிபுரியும் துறையிலும், இடத்திலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு, நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
எந்த துறையில் முழுமையான அர்ப்பணிப்புடன் பணிபுரிய முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த துறை சார்ந்த வாய்ப்புகளை தேட வேண்டும். இதனால் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினாலும், வேலைபறிபோகாது. உங்களது தற்போதைய வருமானத்துக்கு ஏற்ற படியே வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்துக்கு உதவும் வகையில் சேமிப்பு, முதலீடுகளை பணியில் இருக்கும் போதே திட்டமிட்டு செயல்படுங்கள்.
