நவ 30, 2011 12:00 AM
நவ 30, 2011 12:00 AM
பிழைப்பதற்கா வழியில்லை? என்ற ஒரு பிரபலமான பொன்மொழி உண்டு. பரந்த இந்த உலகில் அனைவருக்குமே வாய்ப்புகள் உள்ளன. நமக்கான வாய்ப்புகளை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் நமது வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. நியாயமாகவும், நேர்மையாகவும் செய்தால், எந்தத் தொழிலும் இழிவானதல்ல என்பது நாம் நன்கு அறிந்த ஒன்று.
சமீப வருடங்களாகவே, அழகுக்கலைத் தொழில் நல்ல வளர்ச்சியைப் பெற்றுவருகிறது. ஆண்களும், பெண்களும் இத்தொழிலில் பரவலான ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்துறை தொடர்பாக, சிறியதும், பெரியதுமாக பல கல்வி நிறுவனங்கள் பல இடங்களில் முளைத்து வருகின்றன. அழகுக் கலை மையங்கள் பல இடங்களில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
முறைப்படுத்தப்படாமை
இத்தொழில் தொடர்பான இன்னும் முறையான விதிமுறைகள் உருவாக்கப்படவில்லை என்பதுதான் பெரிய பிரச்சினையே. அழகுக்கலை, தொழில் திறன் சார்ந்தது என்ற வகைக்குள் இருந்தாலும், அதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் தெளிவாக இல்லை. இதனால், எந்தவொரு தொழில் முனைவோரும், எந்தவித அரசு அமைப்பின் அங்கீகாரமுமின்றி அழகுக்கலை நிலையத்தையோ, அதுதொடர்பான கல்வி நிறுவனத்தையோ தொடங்க முடியும்.
தொழில்பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அல்லது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான தலைமை இயக்குநரகம் என்ற அமைப்பு, ஒரு தொழில் பயிற்சி வழங்குநர், தேவைப்பட்டால் அதற்கான அங்கீகாரத்தைப் பெறலாம் என்ற விதிமுறையை வைத்துள்ளதால், அழகுக்கலை தொடர்பான தொழிலில் ஈடுபட, எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை மற்றும் ஆரம்பகட்ட சோதனையும் இல்லை.
இது மாணவர்களுக்கு நல்ல செய்தி அல்ல. மேலும், இதுதொடர்பான புதிய விதிமுறை வகுக்கப்பட்டு, அது நடைமுறைக்கு வருவதற்கு குறிப்பிட்ட காலம் ஆகும் என்பதால், இத்துறையில் பயிற்சிபெற விரும்பும் மாணவர்கள், ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேரும் முன்பாக நன்கு யோசித்து செயல்பட வேண்டும்.
பயிற்சி நிலையங்கள் விதிக்கும் கட்டணங்கள் சமயங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். ஏனெனில், இதுதொடர்பாக அவர்களுக்கு வரைமுறைகள் கிடையாது. எனவே, தாம் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய் பணத்திற்கும், அதற்கேற்ற நன்மை உண்டா? என்று ஆராய்ந்து பார்த்தே செலவு செய்ய வேண்டும். பயிற்சி நிறுவனங்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களுக்கு மயங்கிவிடக்கூடாது மற்றும் அதை ஆராயாமல் நம்பிவிடவும் கூடாது. விரிவான முறையில் விசாரணை மேற்கொண்டு, ஆய்வுசெய்த பிறகே, ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
இணைப்பு அங்கீகாரம் மற்றும் கூட்டு
ஒரு பயிற்சி நிறுவனத்தின் இணைப்பு அங்கீகாரம் மற்றும் கூட்டு ஒத்துழைப்பு குறித்து நன்கு விசாரித்தப் பிறகே, விரும்பும் பயிற்சியில் சேர வேண்டும். ஒரு பயிற்சி நிறுவனம் வைத்துள்ளதாக கூறப்படும் கூட்டு ஒத்துழைப்பு உண்மையானதா? அல்லது விளம்பரத்திற்காக மேற்கொள்ளப்படும் உத்தியா? என்பது குறித்து நன்கு ஆராய வேண்டும். வெளிநாட்டு அளவில் ஒத்துழைப்பு வைத்திருக்கும் பயிற்சி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு, கடல்கடந்த வேலை வாய்ப்புகளுக்கான சாத்தியம் ஏற்படுகிறது.
பயிற்சி அங்கீகாரம்
தற்போதுவரை, அழகுக்கலை படிப்பில் எந்தப் பயிற்சி நிறுவனமும், பட்டங்களை வழங்குவதில்லை. டிப்ளமோ மற்றும் சான்றிதழ்கள்தான் வழங்கப்படுகின்றன. முடி திருத்தம் என்பது இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழிலாக இருக்கையில், இந்திய கல்வி அமைப்பானது, அதை ஒரு தொழில் கல்வியாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. எனவே, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள், தாங்களாகவே ஒரு பயிற்சி அமைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
அழகுக் கலை துறையில் சரியான கட்டுப்பாடுகள் இல்லாததால், பயிற்சி நிறுவனம் தொடர்பாக ஏமாறும் மாணவர்கள் அதிகபட்சம் நீதிமன்றம் வரை செல்ல முடிகிறது. எனவே, புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் வரை, மாணவர்களின் புத்திசாலித்தனமே அவர்களை காப்பாற்றுகிறது.
முக்கிய அம்சங்கள்
அழகுக்கலை துறை என்பது, முடி, தோல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் சம்பந்தப்பட்டது. எனவே, பெரிய முடிதிருத்தும் நிலையங்கள், ஹெல்த் கிளப்புகள், ரிசார்ட்டுகள் உள்ளிட்டவைகளில் பணி வாய்ப்புகளைப் பெறலாம் அல்லது ஆலோசகராகவோ, ஆசிரியராகவோ மற்றும் தொழில் முனைபவராகவும் இருக்கலாம். மேலும், சினிமா உள்ளிட்ட கலைத் துறையிலும் வேலை வாய்ப்புகள் உண்டு. மாடலிங் துறையிலும் வேலைவாய்ப்பை பெறலாம்.
அழகுக்கலை பயிற்சிக்கான கட்டணம் சுமார் ரூ.10,000 முதல் 1 லட்சம் வரை அல்லது அதற்கு மேலும், பயிற்சியின் காலகட்டம் மற்றும் தன்மையைப் பொறுத்து வேறுபடுகிறது.
டிப்ளமோ முடித்தவர்கள், புதிதாக துறையில் நுழையும்போது ரூ.6000 முதல் 8000 வரை பெறுவார்கள். மேலும், ஊக்கத்தொகை மற்றும் டிப்ஸ் போன்றவையும் கிடைக்கும். அதேசமயம், புகழ்பெற்ற பயிற்சி மையங்களில் படித்து வருபவர்கள் மற்றும் அனுபவமுள்ளவர்கள் பெறும் ஊதியம் அதிகம். அவரவர் வேலை செய்யும் துறை மற்றும் இடத்தைப் பொறுத்து சம்பள விகிதங்கள் மாறுபடுகிறது.
