ஜன 07, 2012 12:00 AM
ஜன 07, 2012 12:00 AM
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது மீண்டும் பொருளாதார தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதனை நாம் அறிவோம். கடந்த முறை தேக்க நிலை வந்த போது சர்வதேச அளவில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதும், பணி நியமனங்கள் அற்றதும், ஆனால் பணி நீக்க சூழல்கள் தோன்றியதும் உண்மைதான். எனவே மீண்டும் அதே போன்ற பாதிப்புகள் வேலை வாய்ப்பு சந்தையில் ஏற்படுமோ என்ற பயம் இயல்பாகவே நம்முள் எழுகிறது.
ஆனால் இந்த எண்ணத்தை முற்றிலும் உடைக்கும் விதத்தில் அபரிமிதமான வேலை வாய்ப்பு வளர்ச்சி இந்தியாவில் ஏற்படும் என்று இரண்டு நிறுவனங்கள் தங்கள் ஆய்வறிக்கை முடிவுகளை வெளியிட்டிருப்பது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் வேலை வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும் என்றும் இது உலகிலேயே சிறந்த அளவில் திகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த சர்வதேச எச்.ஆர்., நிறுவனம் என்று கூறப்படும் மேன்பவர் நிறுவனமும், மைஹயரிங்.காம் இணையதளமும் தங்கள் ஆய்வறிக்கைகளைப் பட்டியலிட்டதை உங்களுக்காகத் தருகிறோம்.
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வேலை வாய்ப்பு சந்தை அபார வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. வரும் 2012ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் அசுர வளர்ச்சி காண்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. கடந்த மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவிலுள்ள பணிவாய்ப்பாளர்கள் புதிய பணி நியமனங்கள் குறித்து அதிக கவனம் செலுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் சேவைத்துறை மற்றும் கட்டுமானத்துறைகளிலேயே அதிக அளவு பணி நியமனங்களுக்கான வாய்ப்புகள் இருக்கிறது.
சர்வதேச சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவுவதால் இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் பணி வாய்ப்புகளில் தொய்வு ஏற்பட்டாலும், அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்த நிலை மாறி அதிக அளவு பணி நியமனங்களுக்கான வாய்ப்பு தோன்றும். உள்கட்டுமானம், ஐ.டி., துறைகளிலும் இதே கால கட்டத்தில் மிகச் சிறந்த பணி வாய்ப்புகள் தோன்றும்.
இந்தியாவிலுள்ள 4 ஆயிரம் பணி வாய்ப்பாளர்களிடையே இந்தியாவின் 9 பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அடுத்த காலாண்டிற்கான நேர்மறையான எதிர்பார்ப்புகள் இருப்பதனையே வெளிப்படுத்தியுள்ளன.
