அக் 25, 2012 12:00 AM
அக் 25, 2012 12:00 AM
மாணவர்கள், திட்டமிட்டு செயல்படும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், வாழ்வில் எளிதில் சாதிக்கலாம். பெரும்பாலானோர், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே தீர்மானிக்க தவறி விடுகின்றனர்.
கிராமப்புற மாணவர்களுக்கு திட்டமிடாமை பின்னடைவை உண்டாக்கும். இவர்களுக்கு வாய்ப்புகள் குறைவு. கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியும். நகர்ப்புற மாணவர்களுக்கு வாய்ப்புகள் அருகிலேயே இருக்கும். என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருப்பர்.
அடிப்படையில், கிராமப்புற மாணவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும், சில விஷயங்களில் நகர்ப்புற மாணவர்கள் முந்தி நிற்கின்றனர். மாணவர்களின் பெற்றோருடன் விழிப்புடன் இருப்பதே இதற்கு காரணம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கடைசி தேதிக்கு சற்று முன்பு, அவசர அவசரமாக விண்ணப்பத்தை அனுப்புகின்றனர்.
அடுத்து ஹால் டிக்கெட் வந்த பின்னர்தான் அது தொடர்பாக படிக்க முயற்சி செய்கின்றனர். இன்றைய போட்டி மிக்க உலகுக்கு இது சரி வராது. மேற்படிப்புக்குரிய நுழைவுத் தேர்வாக இருந்தாலும் சரி, வேலைவாய்ப்புக்குரிய தேர்வுகளாக இருந்தாலும் சரி. வெற்றி என்பது திட்டமிட்டுக் கொள்பவர்களுக்கே சாதகமாக அமைகிறது.
ஒரு குறிப்பிட்ட தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால், ஆண்டு தோறும் அந்த தேர்வு எப்போது நடக்கிறது; அதற்கு முன் குறைந்தபட்சம் எவ்வளவு காலம் தயாராக வேண்டும்; தற்போதுள்ள வேலைகளுக்கு இடையில் எவ்வளவு நேரம் ஒதுக்குவது என பல விஷயங்களை நன்கு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். சுயமாக படிக்கலாமா, பயிற்சி மையத்துக்கு செல்வது அவசியமா உள்ளிட்ட விஷயங்களை, கருத்தில் கொள்வது நல்லது.
பழைய கேள்வித் தாள்களை பயிற்சிக்கு எடுத்துக் கொள்வது, ஏற்கனவே இந்த தேர்வை எழுதியவர்களிடமும், அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களிடமும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் அத்தியாவசியமானவை.
விண்ணப்பத்துடன், கைகளுக்கு கிடைக்கும் விளக்க குறிப்புகள் மட்டுமே போதுமான தகவல்களை அளிக்காது. தேர்வு தொடர்பான அத்தனை விபரங்களையும் தேடித்தேடி தெரிந்து கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை அனுப்பிவிட்டு, தேர்வாகி விடுவோம் என மனதில் கோட்டை கட்டுவது வெற்றிக்கு உதவாது.
