அக் 25, 2012 12:00 AM
அக் 25, 2012 12:00 AM
நமது பள்ளிப் பருவத்தின் போதும் சரி, கல்லூரிப் படிப்பின் போதும் சரி, நாம் தேர்ந்து எடுத்திருக்கும் துறை சார்ந்த அறிவு மற்றும் திறன்களைப் பெறுவதில் நாம் குறிப்பாக இருப்போம். இந்த அறிவு நமது தொழில் நுட்ப ரீதியான தேவைகளை அறிவதற்கு உபயோகமாக இருக்கும்.
ஆனால் பொதுவாக கல்லூரியில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களிடம் உங்கள் பணி எதிர்காலம் குறித்து என்ன முடிவு செய்துள்ளீர்கள் என்று கேட்கும்போது பலருக்கும் அது ஒரு முடிவு தெரியாத குழப்பமான ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி வேகமாக வளர்ந்து வரும் நாட்களில் புதிய புதிய துறைகளும், பணித் தேவைகளும் இருக்கும் நிலை உள்ளது.
குறைந்த சதவிகித மாணவர்கள் மட்டுமே தங்கள் பணி எதிர்காலம் தொடர்புடைய தெளிவான கண்ணோட்டத்துடனும் அதற்கான தயாரிப்புகளிலும் ஈடுபடுகிறார்கள். கல்லூரிகளில் பாடப் பகுதியை முடிப்பதற்கே போதுமான நேரம் இல்லாத நிலையில் பணி எதிர்காலம் குறித்த சில முக்கியத் தகவல்களை மாணவர்களிடம் கூறுவதற்கான சாத்தியமும் கம்மிதான்.
அப்படிப்பட்ட சில முக்கிய அம்சங்களை உங்களுக்காகத் தருவதுதான் இந்த படைப்பின் நோக்கமாகும். உங்கள் படிப்பு உங்கள் எதிர்கால எல்லைகளைக் குறுக்குவதில்லை. கல்லூரியில் நாம் என்ன பிரிவில் பட்டம் முடித்தோமோ, அதில் தான் நமக்கு எதிர்காலம் உள்ளது என்ற சிந்தனை நம்மில் பலருக்கும் உள்ளது. ஆனால் இன்றைய வேலை வாய்ப்பு சந்தையில் இது முற்றிலும் தவறான கருத்தாகும்.
உதாரணமாக நீங்கள் ஜர்னலிசம் பட்டம் பெற்றிருந்தாலும், பப்ளிக் ரிலேசன்ஸ் ஆபிசர், மார்கெடிங் புரொபஷனல் போன்ற உங்கள் படிப்புக்கு முற்றிலும் தொடர்பற்ற பணிகளில் கூட ஈடுபட முடியும். ஆனால் துறை மாற்றி நாம் இயங்குவதற்கு தேவைகளான தகவல் பரிமாற்றத் திறன், துறை சார்ந்த அறிவு போன்றவற்றை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேதியியல், இயற்பியல், கணிதம் போன்றவற்றை முடித்துவிட்டு வங்கிப் பணிகளில் அமரவும், வணிகவியலை முடித்துவிட்டு கம்ப்யூட்டர் துறையில் பணியில் அமர்வதும் சாத்தியம் தான் என்ற உண்மையை உணர வேண்டும்.
உங்கள் படிப்பு பணி வாய்ப்பாளருக்கு முக்கியம் இல்லை. நமது பணி எதிர்காலத்தை தேர்ந்து எடுப்பதில் கல்லூரிப் படிப்புக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் மாறி வரும் இன்றைய வேலை வாய்ப்பு சந்தையில் பணி வாய்ப்பாளர் உங்கள் படிப்புக்குத் தரும் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது. தகுந்த ஊழியரை ஒரு பணி வாய்ப்பாளர் தேர்ந்து எடுக்கும் போது படிப்பை விட தனது வேலைக்குத் தகுந்த திறன்கள் விண்ணப்பதாரரிடம் இருக்கிறதா என்பதை அறிவதில்தான் அதிக கவனம் செலுத்துவதாக இந்தத் துறை சார்ந்த வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
நீங்கள் எந்தப் பள்ளியில் படித்தீர்கள், எந்தக் கல்லூரியில் படித்தீர்கள் என்பதை விட, விண்ணப்பித்திருக்கும் வேலைக்கு நீங்கள் எந்த விதத்தில் மதிப்பைக் கூட்ட முடியும் என்பதில்தான் பணி வாய்ப்பாளரின் கவனம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும். பணி அனுபவம் பெற்றிருப்பது இன்னுமொரு சிறப்பான தகுதியாகவும் மாற முடியும்.
நீங்கள் பட்டதாரியா இல்லையா என்பது கூட பிரச்னையில்லை கல்லூரிகள் மூலம் பெறும் பட்டங்கள் முக்கியம்தான் என்ற போதும், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பணி வாய்ப்பாளர்கள் அது குறித்து அக்கறை காட்டுவதில்லை என்று செய்திகள் கூறுகின்றன. உங்கள் திறன்கள், உங்களைப் பயிற்றுவிப்பதில் உள்ள இலகுத் தன்மை, பணி அனுபவம் என்பதுதான் உங்கள் படிப்பைவிட முக்கியமான தேவைகளாக பணி வாய்ப்பாளர்களால் பார்க்கப்படுகிறது.
உங்கள் கல்வித் தகுதி உங்களைப் பற்றிய முதல் எண்ணத்தை வலுவாக உருவாக்க முடியும் என்ற போதும் மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகளை வளர்த்துக் கொள்வதே உங்கள் பணி எதிர்காலத்தை வளப்படுத்த முடியும். உங்கள் கல்லூரிப் பருவத்தில் கேள்வியே படாத வேலைகளும் உள்ளன ஒரு துறையில் பட்டப்படிப்பை நாம் மேற்கொள்ளும் போது, அந்தத் துறை சார்ந்த பணி வாய்ப்புகள் மட்டுமே நமக்கு தெரிவிக்கப்படுகின்றன.
இந்தத் துறை சார்ந்த இதர வேலை வாய்ப்புகள் மற்ற பிரபலமான வேலைகளைப் போன்று வளமான வாய்ப்புகளை வழங்க முடியும் என்பது கல்லூரிகளில் அதிகம் சொல்லப் படுவது இல்லை. உதாரணமாக ஆங்கில மொழியியல் படிப்பு படிக்கும் ஒருவர் தனக்கு ஆசிரியப் பணியே அதிகம் வாய்ப்பு தர முடியும் என்று நம்புகிறார். ஆனால் இந்தத் துறை சார்ந்த புரூப் ரீடிங் புரொபஷன், ஸ்பீச் ரைட்டர், பப்ளிஷர், ஆதர் போன்ற இதர வாய்ப்புகளும் உள்ளன என்பதை அறிய வேண்டும். உங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தில் முழுமையாக ஈடுபடுங்கள்.
பணி எதிர்காலம் குறித்த அதிகபட்ச தகவல்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கல்லூரியிலிருந்து அதிகம் அறிய முடியாத நிலை இருந்தாலும், உங்கள் படிப்பு முடிந்த பின்னரும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்சங்கத்தில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இதன்மூலம் உங்களுக்கு உங்கள் படிப்பு தொடர்புடைய மாறிவரும் தேவைகளை அறிவது எளிதாகிறது.
இந்த வலுவான வலையமைப்பு உங்கள் பணி எதிர்காலத்தில் பல்வேறு புதிய வாய்ப்புகளை அறிவதற்கும், நமக்காக பெரும் சேவைகளைச் செய்த நமது பேராசியர்களுடன் தொடர்ந்த நல்லுறவை வளர்ப்பதற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
