ஏப் 25, 2009 12:00 AM
ஏப் 25, 2009 12:00 AM
இந்தியாவின் பெரும்பகுதி கிராமங்களை உள்ளடக்கியது என்பதை அறிவோம். இந்திய மக்கள் தொகையின் பெரும் பகுதியினர் கிராமங்களிலேயே வசிக்கின்றனர்.
எனவே நம் நாட்டின் வளர்ச்சியானது கிராமங்கள் மற்றும் கிராமப்புற மக்களின் முன்னேற்றத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. நெருக்கடியான சூழலில் இயங்கும் கிராமப்புற நிறுவனங்களின் வெற்றிக்கு முறையான தொழில்நுட்ப மேலாண்மை அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது.
கிராமப்புற மேலாண்மையின் மூலமாக புதிய தொழில் வல்லுனர்களான மேலாளர்களை உருவாக்கி கிராமப்புற நிறுவனங்களின் நிர்வாகத்தைச் சீராக்குவது, தன்னிறைவு பெற வைப்பது மற்றும் கிராமப்புற மக்களின் திறனை மேம்படுத்துவது ஆகியவை இத்துறையின் நோக்கமாக உள்ளது. மேலும் திட்ட உருவாக்குனர்கள், இயக்குனர்கள், பொது மேலாளர்கள், மேலாளர்கள் போன்றவர்களுக்கும் இத்துறை குறித்த பயிற்சிகளை வழங்குவது மற்றொரு முக்கிய நோக்கமாகவுள்ளது. இதேபோல செயல், பிரச்னைகளுக்குத் தீர்வு, திட்டத்தை மையப்படுத்திய ஆராய்ச்சி மற்றும் ஆலோசனகைளின் வாயிலாக புதிய கிராமப்புற மேலாண்மை கருத்துக்களைக் கட்டுவதும் முக்கிய நோக்கமாகும்.
இப்படிப்புகளில் வகுப்பறைக் கல்வி, களப்பணி மூலமாக மாணவர்களின் மனதில் புதிய கிராமப்புற கட்டுமானத்திறக்த் தேவையான சிந்தனைகள் விதைக்கப்படுகின்றன. வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி வறுமையிலிருந்து அவர்களை விடுவிக்கும் தூய்மையான சிந்தனையும் உள்ளது.
என்ன தேவை
சராசரிக்கும் அதிகமான புத்திசாலித்தனம், நல்ல தகவல் தொடர்புத் திறன், கிராமப்புற தன்னிறைவு வளர்ச்சியின் மீது அபாரமான ஈடுபாடு, இந்திய கிராமங்களின் சூழலுடன் இயைந்து பணியாற்றும் தன்மை போன்றவை இத்துறையில் இணைய கட்டாயத் தேவைகளாகக் கருதப்படுகின்றன.
படிப்புகளும், பயிற்சிகளும்
பெரும்பாலான கிராமப்புற மேலாண்மைப் படிப்புகள் பட்டமேற்படிப்புகளாகவே தரப்படுகின்றன. எனினும் சமூக அறிவியலில் இளநிலைப் பட்டப்படிப்பில் ஊரகப் பொருளாதார பாடம் படிப்பது மற்றும் பொருளாதாரத்தில் பட்டமேற்படிப்பு படிப்பதன் மூலமாக நம்மால் கிராமப்புற வளர்ச்சியோடு ஒரு பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்ள இயலும். கிராமப்புற மேலாண்மையில் பட்ட மேற்படிப்பை எந்தப் பிரிவில் பட்டம் முடித்தவரும் படிக்கலாம். ஆனால் நுழைவுத் தேர்வு மூலமாகவே சேர முடியும். இந்த நுழைவுத் தேர்வில் கணிதம், வெர்பல் திறன், காம்ப்ரிஹென்சன், சமூகப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு ஆகிய பகுதிகளில் கேள்விகள் இடம் பெறுகின்றன.
கல்வி நிறுவனத்தின் தேவைக் கேற்ப கிராமப்புற வளர்ச்சி மற்றும் இயற்கை ஆதாரங்கள் தொடர்பான பட்ட மேற்படிப்பில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பயின்ற பட்டதாரிகளும் பிற பட்டதாரிகளும் இணையலாம். சமூக அறிவியல் அல்லது வளர்ச்சி நிர்வாகவியல் படித்தவர்களும் கிராமப்புற மேலாண்மைப் படிப்புகளில் சேரலாம். இதில் சிறப்பு ஆய்வுப் படிப்புகளும் உள்ளன.
வாய்ப்புகள் எங்கே
கூட்டுறவு சங்கங்கள், என்.ஜி. ஓக்கள், அரசு வளர்ச்சி நிறுவனங்கள், கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய மற்றும் சர்வதேச நன் கொடை நிறுவங்களில் வாய்ப்புகள் உள்ளன. பாசன மேலாண்மை, கிராமப்புற சப்ளை நிறுவனங்கள் ஆகியவற்றிலும் வாய்ப்புகள் உள்ளன. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுடன் இணைந்து கன்சல்டன்சி பணிகள், ஆய்வு மற்றும் அறிவுறுத்தும் பணிகளும் உள்ளன. மேலும் அக்ரோ நிறுவனங்கள், கிராமங்களில் உற்பத்தியாகும் பொருட்களை வழங்கும் நிறுவனங்கள், விதை, உரம், அக்ரோகெமிக்கல், விலங்குகளுக்கான உணவு தயாரிப்பு நிறுவனங்கள், கால்நடைப் பொருட்கள் மற்றும் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இத்துறையில் கபார்ட் என்னும் நோடல் நிறுவனமும் உள்ளது.
அரசின் கிராமப்புற தன்னிறைவுத் திட்டங்களையும் தன்னார்வ நிறுவனங்களுக்குமான உறவை வலுப்படுத்தி திட்ட வெற்றிக்கான முயற்சிகளைச் செய்யும் ஊக்க சக்தியாக இந்த நிறுவனம் திகழ்கிறது.
துறையின் முக்கிய கல்வி நிறுவனங்கள்
தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களிலும் ஊரக மேலாண்மைப் படிப்புகள் தரப்படுகின்றன. சிலவற்றில் பட்டப் படிப்புகளாகவும் சிலவற்றில் பட்ட மேற்படிப்புகளாகவும் தரப்படுகின்றன. இந்தியாவில் இப் படிப்புகளைத் தரும் முக்கிய நிறுவனங்களின் பெயர்கள் மட்டும் இங்கே தரப்படுகின்றன.
- Institute of Rural Management Anand, Anand- Xavier Institute of Management, Bhubaneswar
- Indian Institute of Rural Management, IIRM Campus, Jaipur
- Centre for Studies in Rural Management (CSRM), Gujarat Vidyapith, Dist Gandhinagar (Gujarat)
- Mahatma Gandhi Chitrakoot Gramodaya Vishwavidyalaya, Chitrakoot, Satna MP.