தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/புள்ளியியல் - துறை அறிமுகம்

புள்ளியியல் - துறை அறிமுகம்

புள்ளியியல் - துறை அறிமுகம்


ஜூன் 06, 2009 12:00 AM

ஜூன் 06, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 06, 2009 12:00 AM ஜூன் 06, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்வேறு துறை தொடர்புடைய தகவல்களை சேமித்து, முறைப்படுத்தி, கணக்கீடுகளின் மூலமாக எதிர்காலத்திற்குத் தேவையான உபயோகமான தகவல்களை அளித்திடும் கணிதத்தின் ஒரு பிரிவு தான் புள்ளியியல் எனப்படுகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்திலும் புள்ளியியலுக்கான தேவையும் அதன் பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே போவதைக் காண்கிறோம். கள ஆய்வு, அரசு தொடர்புடைய செயல்பாடு, அறிவியல் ஆய்வு, வணிகம், விளையாட்டு, மருத்துவம் என்று பல்வேறு துறைகளிலும் புள்ளியியலாளர்களின் முக்கியத்துவமும் பங்களிப்பும் அதிகமாக உள்ளது. முறையான திட்டமிடலின் மூலமாகவே அரசும் நிறுவனங்களும் இதர குழுக்களும் வெற்றி பெற முடியும் என்னும் போட்டிகள் நிறைந்த இந்த உலகில் திட்டமிடலின் மையப்புள்ளியாகத் திகழ்வது புள்ளியியல் தான் என்றால் அது மிகையில்லை.

இத்துறையில் இணைந்திட குறைந்தபட்சம் இளநிலைப் பட்டப்படிப்பு ஒன்றை கணிதம் அல்லது புள்ளியியலில் பெற்றிருக்க வேண்டும். துறையில் மிகப் பெரிய பதவிகளைப் பெற புள்ளியியலில் பட்டமேற்படிப்பு அல்லது பி.எச்டி., எனப்படும் ஆய்வுப் படிப்பை முடித்திருக்க வேண்டும். சில பணிகளுக்கு புள்ளியியலை துணைப்பாடமாகக் கொண்டு பொருளாதாரத்தில் பட்டம் படித்திருப்பது தேவைப்படுகிறது.

புள்ளியியல் துறையில்நல்ல வாய்ப்புகளைப் பெற விரும்பினால் புள்ளியியல் திறனுடன் கூடுதலாகப் பொருளாதாரம், ஆபரேஷன்ஸ் ரிசர்ச், கம்ப்யூட்டர் சயின்ஸ், நிர்வாகவியல் போன்ற பாடங்களைப் படித்திருப்பது நல்ல பலன்களைத் தரும்.

நிறுவன ஆராய்ச்சியில் ஈடுபட விரும்புபவர்கள் பல ஆண்டுப் பணி அனுபவத்துடன் பட்ட மேற்படிப்பு முடித்திருப்பது தேவைப்படுகிறது. மிகச் சிறந்த தனிப் பயிற்சிகைள மேற்கொண்டவர்கள் இத் துறையில் நல்ல முன்னேற்றங்களை அடைகிறார்கள். பிற படிப்புகளைப் போலவே, புள்ளியியலிலும் பட்டப் படிப்பை 3 ஆண்டும் பட்ட மேற்படிப்பை 2 ஆண்டும் படிக்க வேண்டும்.

பிளஸ் 2 முடித்து விட்டு புள்ளியியலில் பட்டப் படிப்பு படிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2ல் குறைந்தது 50 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2ல் கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு பாடத்தை கட்டாயம் படித்திருக்க வேண்டும். புள்ளியியலில் எம்.எஸ்சி., படிப்பில் சேர பி.எஸ்சி., பி.ஏ., படிப்பில் ஒன்றில் கணிதத்தை அல்லது புள்ளியியலை கட்டயாமாக படித்திருக்க வேண்டும். பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்சில் 50 சதவீதம் பெற்றிருப்பவரும் எம்.எஸ்சி., படிக்க முடியும்.

சில பல்கலைக்கழகங்கள் புள்ளியியல் பட்டமேற்படிப்புக்கு நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. எனவே இத் துறையில் படிக்க விரும்புபவர்கள் தாங்கள் சேரவிருக்கும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் தேர்ச்சி முறையைப் பற்றி அறிந்து கொள்வது அறிவுறுத்தப்படுகிறது.

புள்ளியியலாளராகப் பணியாற்ற சிறந்த ரீசனிங், விடாமுயற்சி, புதிய பிரச்னைகளுக்கு புள்ளியியல் தத்துவங்களை செயல்படுத்தும் திறமை, கணித அறிவு, தர்க்க அறிவு போன்றவை தேவைப்படுகின்றன. இலகுத் தன்மை, ஆர்வம் மற்றும் கட்டுப்பாடான போக்கு தேவைப்படுகின்றன.

தற்போது புள்ளியியலில் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்து வருவதால் கம்ப்யூட்டர் திறனும் தேவைப்படுகிறது. இத் துறையில் இணைய விரும்புபவருக்கு வெர்பல் மற்றும் எழுதும் திறனும் இருந்தால் நன்றாக மிளிர முடியும். மேலும் ஊக்க சக்தி, பொறுமை, விடா முயற்சி, விபரங்களை அறியும் ஆர்வம், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், தர்க்க சிந்தனை, முடிவுகளை சுயமாக எடுக்கும் திறன் ஆகியவையும் தேவைப்படுகின்றன.

தகுதி வாய்ந்த புள்ளியியலாளருக்கு அரசுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்திய புள்ளியியல் பணிகள், இந்தியப் பொருளாதாரப் பணிகள், சிவில் சர்விசஸ் போன்றவற்றிலும் இவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் புள்ளியியல் தொடர்புடைய ஆசிரியப் பணிகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. தற்போது எகனாமெட்ரிசியன், பயோஸ்டாடிஸ்டிகல் ரிசர்ச் அனலிஸ்ட், பயோமெட்ரீசியன், எபிடெமியோலஜிஸ்ட் போன்ற பணிகளும் இத் துறையில் சிறப்புத் தகுதி பெறுபவருக்குக் கிடைக்கின்றன. ஐ.எஸ்.எஸ்., என்.சி.ஏ.இ.ஆர்., ஐ.ஏ.எம்.ஆர்., ஐ.சி.எம்.ஆர்., போன்ற சிறப்புப் பணி வாய்ப்புகளும் இத் துறையில் இருக்கின்றன. அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வுகளில் தகுதி பெறுபவர்கள் இதில் சேரலாம்.

புள்ளியியல் துறையில் இணையும் புதியவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் 1.75 லட்சம் வரை கிடைக்கும். தனி நபரின் திறமைகளைப் பொறுத்து ஊதிய விகிதங்கள் மாறுபடுகின்றன. ஸ்டாடிஸ்டிக்கல் அனலிஸ்ட், ஸ்டாடிஸ்டீசியன், எகனாமெட்ரீஷியனாகப் பணி புரிபவர்கள் ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ.6.5 லட்சம் வரை சம்பளம் பெறுகின்றனர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணி புரிபவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. கன்சல்டிங், ஆய்வு மற்றும் எழுதுவதன் மூலமாகவும் சிறப்பான வருமானத்தை இத் துறையில் நல்ல படிப்புகளை முடித்தவர் பெறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us