/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வாய்ப்புகள் அனைவருக்கும் சமம்!
/
வாய்ப்புகள் அனைவருக்கும் சமம்!
மார் 12, 2026 03:12 PM
மார் 12, 2026 03:12 PM

'ஏ.ஐ., அலையால் பட்டங்கள் பயனற்றுபோகும்; லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும்'! என்றெல்லாம் பரவலான தகவல்கள் சமீபகாலங்களாக உலா வருகின்றன. இவை உண்மையாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அத்தகைய நிலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, பட்டம் மற்றும் வேலைவாய்ப்பு மீதான பார்வையை மாற்றி அமைக்கவேண்டியது அவசியம்.
பட்டம் பெற்றுவிட்டால் மட்டும் நாம் அந்த துறையில் 'மாஸ்டர்' ஆகி விட முடியாது. பட்டப்படிப்பின் போது நாம் எவ்வளவு முயற்சியை விதைக்கிறோம் என்பதைப் பொருத்தே வேலை வாய்ப்புகள் அமையும். அடிப்படையில் அனைத்து துறைகளிலும் ஏ.ஐ., பயன்படுத்தப்படும் நிலையில், திரும்ப திரும்ப செய்யப்படும் வேலை வாய்ப்புகள் மாற்றம் காணும்.
என்றபோதிலும், தற்போது உருவாகி வரும் 'ஸ்கில்டு ஏ.ஐ., இகோசிஸ்டம்' வாயிலாக ஏ.ஐ.,தொழில்நுட்பத்திற்கும் மேலாக உள்ள திறன்கள் மனிதவளத்தால் மட்டுமே சாத்தியம். அத்தகைய திறன்களை வளர்த்துக்கொள்வது வாய்ப்புகளை விரிவடையச்செய்யும். ஆகவே, ஏ.ஐ.,க்கு அடுத்த நிலை திறன்களை இன்றைய இளைஞர்கள் வளர்த்துக்கொள்வதோடு, தெளிவான குறிக்கோள்களை வகுத்துக்கொள்வதும் முக்கியம்.
பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களையும், எந்த துறையில் பட்டம் பெற்றவர்களையும் ஒரே தளத்தில் சமமான நிலைக்கு ஏ.ஐ., கொண்டுவந்துள்ளதால், கலை அல்லது அறிவியல் சார்ந்த படிப்புகளை படித்தவர்களுக்கும், வாய்ப்புகள் விரிவடைந்து உள்ளன. லாஜிக்கல் ரீசனிங், டேட்டா ஸ்டரச்சர் அல்காரிதம், சிஸ்டம் டிசைன், ஜெனரேட்டிவ் ஏ.ஐ., அல்லது ஏஜென்டிக் ஏ.ஐ., ஆகியவை அவசியமானதாகும்.
ஐ.டி., ஏ.ஐ., வருகைக்கு பிறகு நாம் நமது மேல் வைத்திருக்கும் பார்வை, மனிதர்களுக்கு இடையேயான மரியாதை, தொடர்புத்திறன் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நாம் முதலில் முக்கியத்துவம் அளிப்பதோடு, அழகிய தொடர்புத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தொழில்நுட்ப மற்றும் பொருளாதார மேம்பாடு மேலை நாடுகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. அத்தகைய வளர்ச்சியை நமது நாடும் சந்திக்கும் இத்தருணத்தில் இளம் பருவத்தினர் சுயமாக செயல்படும் நிலைக்கு வருவது இயல்பானதே. உலகளவில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஐ.டி., சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட 'யுனிகார்ன்' உருவாகி உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் நூறுக்கும் மேற்பட்ட 'யுனிகார்ன்' உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சவால்கள் தான் நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள அடித்தளமிடுகின்றன. ஆகவே, தற்போது நிலவும் சவால்களை கண்டு அச்சம் கொள்ளாமல், இன்றைய பயணத்தை மகிழ்ச்சியோடு அனுபவித்து முன்னேறுவோம்!
-நளின் விமல்குமார், தொழில்நுட்ப இயக்குநர், எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம், கோவை.

