மே 11, 2026 08:45 PM
மே 11, 2026 08:45 PM

இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் அறிவியல் கதைகளில் படங்களில் மட்டுமே பார்த்த ரோபோக்கள், இன்று நம் வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும், மருத்துவமனைகளிலும் மிகுதியாக நிறைந்துள்ளன.
செவ்வாய் கிரகத்திற்குச் சென்று ஆய்வு நடத்துவது முதல், நுட்பமான அறுவை சிகிச்சைகளைச் செய்வது வரை ரோபோக்களின் பங்கு அதிகரித்து வருகிறது. இத்தகைய இயந்திரங்களை உருவாக்கும் ஒரு 'ரோபாட்டிக்ஸ் இன்ஜினியர்' ஆக வேண்டும் என்பது பல மாணவர்களின் கனவாக இருக்கிறது. இந்தக் கனவை நனவாக்குவதற்கான வழிகளைப் பற்றி முழுமையாக காண்போம்.
ரோபாட்டிக்ஸ் என்பது வெறும் இயந்திரவியல் சார்ந்த துறை மட்டுமல்ல, இது மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் சென்சார் தொழில்நுட்பம் ஆகிய பல துறைகள் ஒருமித்த துறை ஆகும். ஒரு ரோபாட்டிக்ஸ் இன்ஜினியர், ஒரு ரோபோவை வடிவமைப்பது, அதை உருவாக்குவது, அதற்கான ப்ரோக்ராம்களை எழுதுவது மற்றும் அந்த ரோபோ எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது எனப் பல வேலைகளைச் செய்கிறார். சுருக்கமாகச் சொன்னால், மனிதர்களுக்குப் பதிலாக அல்லது மனிதர்களுக்கு உதவியாகச் செயல்படும் அறிவார்ந்த இயந்திரங்களை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம்.
நீங்கள் ஒரு ரோபாட்டிக்ஸ் இன்ஜினியராக விரும்பினால், அதற்கான அடித்தளம் உங்கள் பள்ளிப் பருவத்திலேயே தொடங்க வேண்டும். குறிப்பாக 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களை முதன்மையாகக் கொண்ட பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில், ரோபோக்களின் அசைவுகளைக் கணக்கிட கணிதமும், அதன் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள இயற்பியலும் மிக அவசியம். அத்துடன் கணினி அறிவியலை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுப்பது, கோடிங் மற்றும் அல்காரிதம் போன்ற அடிப்படை நுணுக்கங்களை முன்கூட்டியே கற்றுக்கொள்ள உதவும்.
நுழைவுத் தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, நீங்கள் பி.இ., அல்லது பி.டெக்., பட்டப்படிப்பில் சேர வேண்டும். இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களான ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ., மெயின் அண்ட் அட்வான்ஸ்டு தேர்வுகளை எழுத வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் சேர பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். இது தவிர, வி.ஐ.டி., எஸ்.ஆர்.எம்., போன்ற தனியார் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளையும் நீங்கள் எழுதலாம்.
பாடப்பிரிவுகள்
ரோபாட்டிக்ஸ் துறையில் நுழைய நேரடியாக 'பி.டெக்.,-ரோபாட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன்' என்ற படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். ஒருவேளை நீங்கள் சேரும் கல்லூரியில் இந்தப் பிரிவு இல்லையென்றால் கவலைப்படத் தேவையில்லை. மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற அடிப்படைப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைப் படித்துவிட்டு, முதுகலைப் படிப்பில் ரோபாட்டிக்ஸ் துறையைச் சிறப்புப் பாடமாகத் தேர்வு செய்யலாம். உண்மையில், பல நிறுவனங்கள் பல்துறை அறிவு கொண்ட மாணவர்களையே அதிகம் விரும்புகின்றன.
இந்தியாவில் கல்வி நிறுவனங்கள்
இந்தியாவில் ரோபாட்டிக்ஸ் படிக்கப் பல தரமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஐ.ஐ.டி., கான்பூர், ஐ.ஐ.டி., பாம்பே, ஐ.ஐ.டி., மெட்ராஸ், ஐ.ஐ.டி., டெல்லி போன்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் இத்துறையில் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளன.
எதிர்கால வாய்ப்பு
அதனைத் தொடர்ந்து, கல்வித் தகுதிக்கு இணையாகச் சில தனிப்பட்ட திறமைகளையும் நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறன், படைப்பாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் மிக முக்கியம். மேலும், பைதான், சி++, ஆர்.ஓ.எஸ்., என்ற ரோபோட் ஆபரேட்டிங் சிஸ்டம் போன்ற மென்பொருள்களைக் கற்றுக்கொள்வது உங்களை மற்ற மாணவர்களிடமிருந்து தனித்துக் காட்டும்.
ரோபாட்டிக்ஸ் முடித்தவர்களுக்கு எதிர்காலத்தில் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஓ., போன்ற அரசு அமைப்புகளில் பல வாய்ப்புகள் உள்ளன. இது தவிர, டெஸ்லா டாடா மோட்டார்ஸ் போன்ற தனியார் கார் உற்பத்தி நிறுவனங்கள், மருத்துவத் துறை, ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் ஊதியத்துடன் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
முடிவாக மாணவர்களிடம், விடாமுயற்சியும், புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இருந்தால், நீங்கள் ஒரு வெற்றிகரமான ரோபாட்டிக்ஸ் இன்ஜினியராக மாறி, உலகையே மாற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும்.
