/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
அதிக நேரம் செல்போன் உபயோகித்தால் மதிப்பெண் குறையும்
/
அதிக நேரம் செல்போன் உபயோகித்தால் மதிப்பெண் குறையும்
அதிக நேரம் செல்போன் உபயோகித்தால் மதிப்பெண் குறையும்
அதிக நேரம் செல்போன் உபயோகித்தால் மதிப்பெண் குறையும்
பிப் 23, 2026 04:01 PM
பிப் 23, 2026 04:01 PM

மாணவர்களின் மிகப்பெரிய எதிரி 'கவனச் சிதறல்' தான். படிப்பு, விளையாட்டு, தூக்கம் என ஒதுக்க வேண்டிய நேரத்தை, ஸ்மார்ட்போன் திரைகள் மெல்ல மெல்ல விழுங்கிவிடுகின்றன. திரை நேரம் மாணவர்களின் கல்வித் திறனையும் மனநலத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இது குறித்து அமெரிக்கக் குழந்தைகள் மருத்துவ அகாடமி (AAP) முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
திரை நேரம் என்பது வெறும் வீடியோ கேம் விளையாடுவது மட்டுமல்ல. சமூக ஊடகங்களைப் பார்ப்பது, டிவி பார்ப்பது, பாடங்கள் சம்பந்தமான வீடியோக்களைப் பார்ப்பது கூட திரை நேரம் தான். எனவே, எல்லா திரை நேரமும் மோசமானது அல்ல. அதை எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்.
நேர விரயம்
ஒரு நாளில் நமக்கு இருப்பது 24 மணி நேரம் மட்டுமே. அதில் அதிக நேரத்தை 'ரீல்ஸ்' பார்ப்பதிலோ அல்லது 'கேம்' விளையாடுவதிலோ செலவிடும்போது, உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, வீட்டுப்பாடம் மற்றும் முக்கியமாகத் தூக்கத்திற்கான நேரம் குறைந்துவிடுகிறது. தூக்கம் குறைந்தால் கவனம் சிதறும்; மதிப்பெண்கள் குறையும்.
கவனச் சிதறல்
பல மாணவர்கள் படிக்கும்போது அருகில் செல்போனை வைத்துக் கொண்டே படிப்பார்கள். படிக்கும் நேரத்தில் பாட்டு கேட்கவோ அல்லது 'மெசேஜ்' அனுப்ப வேண்டும் என்று நினைப்பது வழக்கம். ஆனால், மனித மூளையால் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களில் முழுக் கவனத்தையும் செலுத்த முடியாது. படிக்கும்போது போனைப் பார்ப்பது உங்கள் ஆழ்ந்த கவனத்தைக் குலைக்கும். இதனால், ஒரு பாடத்தைப் படித்து முடிக்கத் தேவைப்படும் நேரம் அதிகரிக்கும் மற்றும் படித்ததும் மனதில் நிற்காது.
சிக்கல்
இணையத்தை புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், நண்பர்களுடன் பாடங்கள் குறித்து விவாதிக்கவும் பயன்படுத்தினால் அது நன்மை பயக்கும். ஆனால், பொழுதுபோக்குக்காக மட்டுமே திரையைப் பயன்படுத்தும் போது தான் சிக்கல் எழுகிறது.
திரை நேரத்தை கட்டுப்படுத்துவதற்கான சில வழிகள்
படிக்க அமரும்போது 'போகஸ் மோட்'-ஐ ஆன் செய்வது, தேவையில்லாத 'நோட்டிபிகேஷன்' தொல்லையிலிருந்து காக்கும்.
தொடர்ந்து மணிக்கணக்கில் படிப்பது சோர்வைத் தரும். 20 அல்லது 30 நிமிடங்கள் முழு கவனத்துடன் படியுங்கள். பிறகு ஒரு 5 நிமிட இடைவேளை எடுக்கலாம்.
இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே, திரையைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். நல்ல தூக்கம் இருந்தால் தான் அடுத்த நாள் வகுப்பில் கவனிக்க முடியும்.
இணையம் சாராத ஓவியம், விளையாட்டு, வாசிப்பு போன்ற பிற பொழுதுபோக்குகளுக்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். இது சோர்வை நீக்கி புத்துணர்வை தரும்.
தொழில்நுட்பம் என்பது வளர்ச்சிக்கு உதவ வேண்டுமே தவிர, தடையாக இருக்கக்கூடாது. எவ்வளவு நேரம் திரையை பார்க்க வேண்டும் என்பதை தீர்மானித்து, ஆக்கபூர்வமான செயல்களில் நேரத்தை செலவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

