sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் நடத்திய நீட் மாதிரி தேர்வில் ஆர்வம்: பெற்றோருடன் வந்து பங்கேற்ற மாணவ - மாணவியர்

தினமலர் நடத்திய நீட் மாதிரி தேர்வில் ஆர்வம்: பெற்றோருடன் வந்து பங்கேற்ற மாணவ - மாணவியர்

தினமலர் நடத்திய நீட் மாதிரி தேர்வில் ஆர்வம்: பெற்றோருடன் வந்து பங்கேற்ற மாணவ - மாணவியர்


UPDATED : ஏப் 27, 2025 12:00 AM

ADDED : ஏப் 27, 2025 09:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 27, 2025 12:00 AM ADDED : ஏப் 27, 2025 09:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தினமலர் நாளிதழ், ராஜலட்சுமி மருத்துவக் கல்லுாரி இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வில், 697 மாணவ - மாணவியர் தங்கள் பெற்றோருடன் வந்து, ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பிளஸ் 2 முடித்த பெரும்பாலான மாணவர்களின் உயரிய கனவுகளில் ஒன்றாக மருத்துவம் படிப்பது உள்ளது. அதற்கு வழிகாட்டும் வகையில், தினமலர் நாளிதழும், ராஜலட்சுமி மருத்துவக் கல்லுாரியும் இணைந்து, சென்னை கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில், நீட் மாதிரி தேர்வு நேற்று நடத்தப்பட்டது.

வழிகாட்டுதல்


சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், 2019 முதல் 2023 வரை, நீட் தேர்வு நடத்திய குழுவில் இடம்பெற்றவரும், பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி முதல்வருமான சுப்பிரமணியன் தலைமையில் நீட் மாதிரி தேர்வு நடந்தது.

இத்தேர்வுக்காக, காலை 6:30 மணி முதல், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பெற்றோருடன் வர துவங்கினர். ஆதார் அட்டையுடன் வந்த மாணவர்களின் பெயர், மொபைல் போன் எண் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டன.

தொடர்ந்து, மாணவர்களுக்கு தேர்வு எழுதும் நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. நீட் தேர்வு நடைமுறைகளின்படி, மாணவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின், தேர்வு அறைக்கு காலை 9:00 மணியளவில் அனுப்பப்பட்டனர்.

அங்கு, கேள்வித்தாள் மற்றும் பதிலளிக்க ஓ.எம்.ஆர்., சீட் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, மாதிரி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில், மத்திய - மாநில பாடப்பிரிவுகளை உள்ளடக்கி, வினாக்கள் இடம் பெற்றிருந்தன.

நீட் தேர்வு நடைமுறைகளில், 80 சதவீதத்திற்கு மேலாக இந்த மாதிரி தேர்விலும் பின்பற்றப்பட்டன. தேர்வு வளாகத்தில் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. தேர்வு முடிந்து வந்த மாணவர்களுக்கு ஜூஸ் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டன.

மேலும், மாணவர்கள் தங்களை மதிப்பீடு செய்து கொள்ளும் வகையில், அனைவருக்கும் விடைத்தாள் வழங்கப்பட்டது. நீட் மாதிரி தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் வினாத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. அதில், சிறந்த மதிப்பெண் பெறும் முதல் ஐந்து பேருக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கமும் பள்ளி வளாக அரங்கத்தில் நடந்தது. இதில், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, ராஜலட்சுமி மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் குணபிரியா, ஆர்.ஜி.ஆர்., அகாடமி நிறுவனர் கோவிந்தராஜ், பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி முதல்வர் சுப்பிரமணியன், 'தினமலர்' நாளிதழ் விளம்பரப் பிரிவு துணை பொது மேலாளர் சேகர் உள்ளிட்டோர் பேசினர்.

பயந்தால் சாதிக்க முடியாது

பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் முதல்வர் சுப்பிரமணியன் பேசியதாவது:


கடந்த 2019 முதல் 2023 வரை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு, நீட் தேர்வு நடத்திய குழுவில் ஒருங்கிணைப்பாளராக நானும் இருந்தேன். நீட் தேர்வு என்பது ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பயத்தை துாக்கி எறிய வேண்டும். நீட் தேர்வும் உங்கள் பொதுத் தேர்வுபோல் ஒரு தேர்வு மட்டுமே.

எல்லா விஷயத்திற்கும் நாம் பயந்தால், வாழ்க்கையில் சாதிக்க முடியாது. நம் முதல் எதிரி பயம் தான்.

நீட் தேர்வுக்கு வழங்கப்படும் ஹால் டிக்கெட்டில் உள்ள அறிவுறுத்தல்களை படிக்க வேண்டும். எதையெல்லாம் எடுத்து செல்ல வேண்டும்; எதை எடுத்து செல்லக்கூடாது என, அதில் அறிவுறுத்தப்பட்டிருக்கும். அதை சரியாக படித்து புரிந்து கொள்ளுங்கள்.

அந்த அறிவுறுத்தல்களை பின்பற்றினால், நீட் தேர்வை பதற்றம் இன்றி எதிர்கொள்ளலாம். தேர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன், நாம் இருக்கும் இடத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு செல்ல, எவ்வளவு நேரம் ஆகிறது என, நேரில் சென்று பார்க்க வேண்டும்.

தினமலர் நாளிதழ் சார்பில், இந்த நீட் மாதிரி தேர்வு, 80 சதவீதம் ஒரிஜினல் நீட் தேர்வு போலவே நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.பி.பி.எஸ்., மட்டுமே ஒரே இலக்காக இருக்க வேண்டாம்: ராஜலட்சுமி மருத்துவ கல்லுாரி துணை முதல்வர் அறிவுரை


நீட் தேர்வுக்காக தயாராகும் மாணவர்கள் பாடத்திட்டத்தை முழுதுமாக புரிந்து, நேரத்தை சரியாக செலவிட்டால் நிச்சயமாக சாதிக்க முடியும் என, ராஜலட்சுமி மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் குணபிரியா தெரிவித்தார்.

குணபிரியா பேசியதாவது:


உயர் கல்வியின் அவசியம் ஏன் என்பதை, மாணவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 முடித்த பின் கல்வியை நிறுத்தாமல், மேலும் தொடர வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

சிந்தனை


உயர் கல்வி, உங்களின் திறன்களை மேம்படுத்துகிறது. அறிவை விரிவாக்கி, சிந்தனையை ஊக்குவிக்கிறது.

நல்ல இடத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், உயர் கல்வி படித்தால் மட்டுமே சாத்தியம். வாழ்க்கை தரம் மற்றும் குடும்பத்தின் பொருளாதார நிலையையும் மேம்படுத்த, ஒரு முக்கிய கருவியாக உயர் கல்வி அமைகிறது. பல நாடுகள், தனிப்பட்ட வளர்ச்சி வாயிலாக முன்னேறி வருகின்றன.

இந்தியா, ஒரு ஜனநாயக நாடாக இருப்பதால், ஒவ்வொருவரின் முன்னேற்றமும் நாடு முன்னேறுவதற்கு வழிவகுக்கிறது. மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றன.

இன்று, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. இது, கடந்த 75 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய வளர்ச்சி.

இந்தியாவில் மருத்துவத் துறையும் வெகுவாக வளர்ந்து வருகிறது. உலகத் தரமான சிகிச்சைகளை, நம் நாடு மிகவும் குறைந்த செலவில் வழங்குகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து பலர், நம் நாட்டிற்கு மருத்துவ சுற்றுலா வருகின்றனர்.

மருத்துவ துறையின் வளர்ச்சிக்கு தனியார் மருத்துவமனைகள், தேசிய சுகாதார திட்டங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சிறந்த காரணங்கள். கொரோனா காலத்தில் உலக நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கிய ஒரே நாடு இந்தியா. இது, நம் அனைவருக்கும் பெருமைக்குரியது; நம் சுகாதாரத் துறையின் திடமான வளர்ச்சியை காட்டுகிறது.

பிரகாசமாகும்



இன்று, டெலி மெடிசின், ரோபோடிக் சிகிச்சைகள் உள்ளிட்ட, பல தொழில்நுட்ப வளர்ச்சிகள், சுகாதார துறையின் தரத்தை உலக தரத்திற்கு உயர்த்தியுள்ளன.

வெளிநாட்டினர் மருத்துவ சுற்றுலாவுக்காக, இந்தியாவுக்கு அதிகம் வருவதால், மருத்துவ துறையின் வளர்ச்சி வேகமடைந்துஉள்ளது. மருத்துவ உபகரணங்கள், மருந்து துறை ஆகியவை இணைந்து, இந்திய சுகாதாரத் துறையை ஒரு பெரும் தொழில் துறையாக மாற்றியுள்ளன.

நீட் தேர்வுக்காக தயாராகும் மாணவர்கள், பாடத்திட்டத்தை முழுதுமாக புரிந்து, நேரத்தை சரியாக செலவிட்டால் நிச்சயமாக சாதிக்க முடியும். அதிகம் பயிற்சி செய்தால், பயம் குறையும், நம்பிக்கை அதிகரிக்கும்.

தேர்ச்சி பெற, நேர நிர்வாகம் மிக முக்கியம். மற்ற துறைகளில் ஏதேனும் ஒரு வகையில் சாதிக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்தை விட, மருத்துவ; துறையில் அன்றாடம் கிடைக்கும் அனுபவங்களுக்கு எதுவும் நிகராகாது.

ராஜலட்சுமி மருத்துவக் கல்லுாரியில் மாணவர்கள் படிக்கும்போது, ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதுவது போன்ற மாணவர்களின் செயல்பாடுகள் சிறந்ததாக விளங்கி வருகின்றன. இங்கு படித்தால் எதிர்காலம் நிச்சயம் பிரகாசமாகும்.

நர்சிங் படிப்புகளுக்கு, நாடு முழுதும் பற்றாக்குறை உள்ளது. இதை படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு. இங்கு படித்து, வெளிநாடுகளில் பலர் நல்ல சம்பளம் வாங்குகின்றனர்.

இதேபோல், பிசியோதெரபி, பி.பார்ம், டி.பார்ம், லேப் டெக்னாலஜி என, 25 கிளை படிப்புகள் உள்ளன. டாக்டர்களுக்கு, இதுபோன்ற துறையைச் சேர்ந்தவர்கள் துணை இல்லாமல் வேலை செய்ய முடியாது.

ஒரே இலக்கு


நீட் தேர்வு எழுதி டாக்டராக முடியாமல் போய் விட்டதே எனகவலை கொள்ள வேண்டாம். எம்.பி.பி.எஸ்., மட்டுமே உங்களின் ஒரே இலக்காக இருக்க வேண்டாம். அதற்குப் பதில் பி.டி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்சி., நர்சிங், பி.எஸ்சி., அலையட் ஹெல்த் சயின்ஸ்' போன்ற பல்வேறு படிப்புகளும் உள்ளன.

எப்போதும் திட்டம் - 1, திட்டம் - 2 என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். ஒன்று கிடைக்கவில்லை என்றால், மற்றொன்றை தேர்வு செய்ய தயாராக இருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

டாக்டர்களுக்கு மாற்றாக ஏ.ஐ., இருக்க முடியாது: ஜெயபிரகாஷ் காந்தி பேச்சு


தினமலர் நாளிதழ் சார்பில், சென்னையில் நேற்று நடந்த நீட் மாதிரி தேர்வு மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி பேசியதாவது:

மருத்துவம் படிக்க அதிகப்படியான அறிவு இருக்க வேண்டும் அல்லது பெற்றோரிடம் அதிக பணம் இருப்பது அவசியம். இதுதான் உண்மை.

நுண்ணறிவு திறன்


மருத்துவத் துறையில் நல்ல எதிர்காலம் உள்ளது. மாணவர்கள் விரும்பி படிக்க வேண்டும்.

சீனாவில் மனிதர்கள் இல்லாத, 15 ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு டாக்டர்கள் உள்ளடக்கிய மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

டாக்டர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாற்றாக ஏ.ஐ., இருக்க முடியாது. முதலில், ரோபோட்கள் வந்தன. இப்போது, செயற்கை நுண்ணறிவு திறன் முன்னேறி வருகிறது. இருப்பினும், டாக்டர்கள் அறிவையும், பார்வையையும் பயன்படுத்துவதால், அவர்களை முழுதுமாக மாற்ற முடியாது.

சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அடிப்படை வேலைகளை தானியங்கி முறையில் செய்யும் நிலையில் மட்டுமே இருக்கிறது. மருத்துவப் பிரிவு எதிர்காலத்தில் மிக முக்கியத்துவம் பெறும். இதனால், மருத்துவக் கல்வி மற்றும் தகுதிகள் பெறுவது நாளடைவில் மிகவும் கடினமாகும்.

நடப்பாண்டில், நீட் தேர்வும் மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வில் சரியான திட்டமிடல், உரிய பயிற்சி, தெளிவான சிந்தனை இல்லாமல் வெற்றி பெறுவது கடினம். ஆண்டுதோறும், 2,000க்கும் மேற்பட்ட பல் மருத்துவருக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தரவுகள் சொல்கின்றன. சமூக ஊடகங்களை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

முழு விதிமுறை


அவர்களுக்கு தெரியாது, நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்று. மாணவர்கள், யு டியூபர் சொல்வதை கேட்டு, தேர்வுக்கு தயாராகின்றனர். மொபைல் போன் செயலியில் கிடைக்கும் ஆவணங்களை வைத்தும் படிக்கின்றனர்; இது, நல்லதல்ல.

நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில், முழு விதிமுறைகளும் கொடுக்கப்படுகிறது. ஆனால், யாரும் படிப்பதில்லை. இதில் கவனமாக இருக்க வேண்டும்.

மருத்துவப் படிப்புகளை நம் நாட்டில் படித்துவிட்டு, இங்கேயே சேவை செய்வது மிகவும் சிறப்பானது. மருத்துவத் துறைகளில் நுழைய முடியாமல் போனவர்கள், எம்.பி.ஏ., 'ஹாஸ்பிடல் ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் என்ற துறையை தேர்வு செய்யலாம். இதில் நல்ல எதிர்காலம் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்கள் தங்களை மருத்துவராக உணர வேண்டும்


நீட் தேர்வு எழுதுவோர் தங்களை மருத்துவராக உணர வேண்டும். இந்த நேர்மறை எண்ணங்களே நாம் தேர்வில் வெற்றி பெறுவதற்கான உந்துசக்தி என ஆர்.ஜி.ஆர்., அகாடமி நிறுவனர் கோவிந்தராஜ் பேசினார்.

அவர் பேசியதாவது:


நீட் தேர்வு எழுதும் தேர்வர்கள், தங்கள் மனதை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். விதைப்பது தான் கிடைக்கும் என்பதை போல், தேர்வுக்கு முன் தேர்வர்கள், நேர்மறையான எண்ணங்களால் மனதை கட்டுப்படுத்தினால் வெற்றி பெறலாம்.

தற்போது, நீட் தேர்வு குறித்த பலதரப்பட்ட கருத்துகளை, நாம் சமூக வலைதளங்களிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாயிலாகவும் பெற்று வருகிறோம். அவ்வாறு பெறும் தகவல்களை, மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும். மாறாக, அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தில், அரசு வழங்கியுள்ள பாடங்களை படிப்பது அவசியம்.

அதேபோல், தேர்வுக்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில், மாணவர்கள் புதிதாக பாடங்களை படிக்க வேண்டும். ஏற்கனவே படித்த பாடப்புத்தகங்களை திரும்ப அசைபோடுவது நல்லது. முதல்முறை தேர்வு எழுதுவோர், தேர்வை கண்டு அச்சப்பட வேண்டாம்.

நீட் நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும். நம்மை போன்ற பல ஆயிரம் மாணவர்கள் எழுதி, வெற்றி பெற்ற தேர்வு என்பதை மனதில் கொண்டு எதிர்கொள்ள வேண்டும். மேலும், நீட் தேர்வு எழுதுவோர் தங்களை மருத்துவராக உணர வேண்டும். இந்த நேர்மறை எண்ணங்களே நாம் தேர்வில் வெற்றி பெறுவதற்கான உந்துசக்தி.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us