அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பாரா மெடிக்கல் படிக்கும் மாணவர்களுக்கான விடுதிகள் இல்லை தங்குமிடம், உணவுக்கு திண்டாட்டம்
அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பாரா மெடிக்கல் படிக்கும் மாணவர்களுக்கான விடுதிகள் இல்லை தங்குமிடம், உணவுக்கு திண்டாட்டம்
UPDATED : பிப் 17, 2026 02:19 PM
ADDED : பிப் 17, 2026 02:21 PM
விருதுநகர்:
அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பி.எஸ்.சி., டிப்ளமோ ஆகிய பாரா மெடிக்கல் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் தங்குமிடம், உணவுக்கு மாணவர்கள் அதிக தொகை செலவிட வேண்டியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனைகளில் பி.எஸ்.சி., நர்சிங், மருந்தாளுனர், ரேடியோகிராபி, டிப்ளமோ நர்சிங், மருந்தாளுனர், ஆப்டோமெட்ரி உள்பட 20 வகையான படிப்புகள் உள்ளது. இவற்றில் பி.எஸ்.சி., டிப்ளமோ நர்சிங் படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த அரசு மருத்துவக் கல்லுாரிகளில் தனியாக விடுதிகள் உள்ளது.
ஆனால் மற்ற பாரா மெடிக்கல் பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு விடுதி வசதி இல்லை. ஒவ்வொரு அரசு மருத்துவக் கல்லுாரியிலும் ஒரு பாரா மெடிக்கல் பிரிவில் ஓராண்டில் 20 மாணவர்கள் சேர்ந்து பி.எஸ்.சி., 4 ஆண்டுகள், டிப்ளமோ 2 ஆண்டுகள் படிக்கின்றனர்.
டாக்டர்கள், செவிலியர்கள் மாணவர்களுக்கு மட்டும் விடுதி வசதிகள் செய்து கொடுத்து விட்டு பாரா மெடிக்கல் மாணவர்கள் தங்களுக்கான தங்குமிடம், உணவு வசதியை மாணவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அரசின் நடவடிக்கையால் மாணவர்கள் பாதிக்கப்படுவது பல ஆண்டுகளாக நீடிக்கிறது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று டாக்டராகும் கனவு நிறைவேறாத மாணவர்கள் பாரா மெடிக்கல் பிரிவுகளில் சேர்ந்து படிக்கின்றனர். இவர்களில் வெளி மாவட்ட மாணவர்களுக்கு தங்குமிடம், உணவுக்கு அதிக செலவாவதால் அவர்களின் மருத்துவ கனவு சிதைவதற்கு தமிழக அரசே காரணமாக மாறியுள்ளது.
எனவே அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பாரா மெடிக்கல் பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக விடுதிகளை கட்டுவதற்கு உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

