தரத்தை பரிசோதிக்கும் புதிய நடைமுறை: விலையில்லா பொருட்கள் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு
தரத்தை பரிசோதிக்கும் புதிய நடைமுறை: விலையில்லா பொருட்கள் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு
UPDATED : நவ 02, 2014 12:00 AM
ADDED : நவ 02, 2014 10:43 AM
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச பாடநூல், சத்துணவு, காலனி, சீருடை, பஸ் பாஸ், லேப்--டாப், சைக்கிள், புத்தகப்பை, கணித உபகரணம், வண்ண பென்சில், கம்பளி சட்டை, புவியியல் வரைபடம் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை வழங்கியது.
தரமற்றவை சப்ளை: மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை கொள்முதல் செய்வது, அதன் தரத்தை பரிசோதிப்பது, பள்ளி வாரியாக சப்ளை செய்வது உள்ளிட்ட பணியை பள்ளிக் கல்வித்துறை செய்யாததால், விலையில்லா பொருட்களில், தரமற்றவை சப்ளை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து, பாடநூல் சப்ளையை, தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டது.
அதற்காக, கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழ்நாடு பாடநூல் கழகம் என்ற பெயரை மாற்றி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கழகம் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சீருடை தவிர மற்ற விலையில்லா பொருட்கள் கொள்முதல் செய்து, பள்ளி மாணவருக்கு சப்ளை செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்பின், புதிய நடைமுறை நடப்பு கல்வியாண்டில்தான் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, பாடநூல் மற்றும் சீருடை தவிர, மற்ற விலையில்லா பொருட்கள், நடப்பாண்டுக்கு, பள்ளி வாரியாக சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றை மாணவர்களுக்கு பள்ளி வாரியாக வழங்க முடியாத நிலை உள்ளதால், பள்ளி திறந்து ஐந்து மாதங்களாகியும், விலையில்லா பொருட்கள் மாணவர்களுக்கு சென்றடையாத நிலையே நீடிக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக, டெண்டர்தாரரால் சப்ளை செய்யப்பட்ட பொருட்கள் தரமானதாக உள்ளதா? என்பதை ஆய்வுசெய்யும் புதிய நடைமுறை.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிக்கு டெண்டர்தாரரால் அனுப்பப்படும் பொருட்களில், ஒரு சேம்பிள் எடுத்து, அந்தந்த வட்டார அலுவகத்தில் (தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்) பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்களிடம் இருந்து தகுதியான தரச்சான்று பெற்ற பின்னர்தான், மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த கூடுதல் பணிகளால், நடப்பாண்டு சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதம் பாடநூல் மற்றும் சீருடை வழங்கியது போல், மற்ற பொருட்களுக்கும் டெண்டர் விடப்பட்டிருந்தால், முன்கூட்டியே சப்ளை செய்திருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

