மாணவியர் வாகனத்தில் பெண் பாதுகாவலர் கட்டாயம்: முதன்மை கல்வி அலுவலர் தகவல்
மாணவியர் வாகனத்தில் பெண் பாதுகாவலர் கட்டாயம்: முதன்மை கல்வி அலுவலர் தகவல்
UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM
ADDED : ஜூன் 14, 2023 06:35 AM
கரூர் மாவட்டத்தில் 89 தனியார் பள்ளிகளின், 350 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் விபத்துகள் காரணமாக, பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதில் வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி, தீயணைக்கும் கருவி, முதலுதவி பெட்டி, பாதுகாப்பு கிரில், டிரைவர் கனரக வாகன லைசென்ஸ் பெற்று, அதில் குறைந்தது, 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி வாகனத்திற்கும் ஒரு தகுதியான உதவியாளர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். உதவியாளர் இல்லாமல் வாகனத்தை இயக்கக் கூடாது உள்பட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பள்ளி வாகனம் விபத்தில் சிக்குவது வழக்கமாக உள்ளது. பள்ளி நிர்வாகம், மோட்டார் வாகன ஆய்வாளர்களின் கண்காணிப்பின்மையே இதற்கு காரணம். இனி இது, தொடரக்கூடாது என்பதே பெற்றோரின் வேண்டுகோளாக உள்ளது.இது குறித்து கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தன் கூறியதாவது:
பள்ளி செல்லும் குழந்தைகள் ஒருவர் கூட பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்டாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி மே 24ல் மாவட்ட நிர்வாகம் போலீஸ், போக்குவரத்துத்துறை, கல்வித்துறை ஆகியோர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது. இதன் மூலம் எந்தவிதமான குறைபாடுள்ள வாகனமும், சாலையில் செல்ல அனுமதிக்கப்படாது என்பது உறுதி செய்யப்பட்டது.இந்தாண்டு ஆய்வு குறைபாடு இருந்த 46 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டதால் பள்ளி வாகனங்களால் எந்த விபத்தும் ஏற்படவில்லை.இவ்வாறு கூறினார்.கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியதாவது:
தனியார் பள்ளி வாகனங்களின் நிலை சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பெண் குழந்தைகள் பயணிக்கும் வாகனத்தில் ஒரு பெண் பாதுகாவலர் உடனிருப்பது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைசி மாணவரை இறக்கி விடும் வரை உதவியாளர்கள் இருக்க வேண்டும். பள்ளி வாகன டிரைவர்கள், மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் தான் இறக்கி விட வேண்டும்.வாகனம் பள்ளி வளாகத்தில் வந்தவுடன் மாணவர்கள் அனைவரும் இறங்கி வகுப்பிற்கு சென்றார்களா மாலை பள்ளி முடிந்து அந்தந்த வாகனங்களில் ஏறினார்களா என்பதை ஆசியர்கள் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில துணை தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி, அரசு விதிமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது வாகனத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. எந்த பள்ளி வாகனமும் விபத்தில் சிக்கக்கூடாது, ஒரு குழந்தை கூட பாதிக்கக்கூடாது என்பதற்கே ஏற்ப வாகனங்களை இயக்கி வருகிறோம், என்றார்.
