போதைப்பொருள் வரும் பாதையை முடக்கி விடுவோம்: மாநகர போலீஸ் கமிஷனர் திட்டவட்டம்
போதைப்பொருள் வரும் பாதையை முடக்கி விடுவோம்: மாநகர போலீஸ் கமிஷனர் திட்டவட்டம்
UPDATED : ஜன 15, 2026 10:35 AM
ADDED : ஜன 15, 2026 10:40 AM
கோவை:
'ஸ்கூல்ல இருந்த வரை அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது சார். காலேஜ்ல சேர்ந்த பின்னாடி தான் எல்லா பழக்கமும் வந்துருச்சு'.
போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட அந்த மாணவனின் பெற்றோர் கதறலை கேட்கும் போது கல் மனதும் கரைந்து விடும். கல்லுாரிகள் அதிகம் உள்ள கோவையில் வெளி மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களை குறிவைத்து கஞ்சா, மெத்தாபீட்டமைன், போதை ஸ்டாம்ப்கள் என, வகை வகையான போதைப் பொருட்கள் விற்பனை நடக்கிறது. போதையில் திளைக்க பார்ட்டி நடத்தும் கலாசாரமும் அதிகரித்து வருகிறது.
போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தாலும், சமீபகாலமாக போதை பொருட்களின் புழக்கமும், கடத்தலும் முன்பை விட அதிகரித்து விட்டது.
இதை தடுக்க போலீஸ் கமிஷனர் கண்காணிப்பில் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.ஐ., தலைமையில், 5 பேர் அடங்கிய குழுவினர், அனைத்து வகையான போதைப்பொருட் கள், கடத்தல், விற்பனை, பதுக்கல் குறித்து தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள உள்ளனர்.
இக்குழுவினர், போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது, வழங்கியவர் யார் என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் திரட்டி, போதை பொருட்கள் பயன்பாட்டை வேரோடு அறுக்க உறுதிபூண்டுள்ளதாக, மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், 'கடந்த ஒரு வாரமாக போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்புக்குழுவினர் தனிப்பட்ட முறையில் கண்காணித்து, கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒட்டு மொத்தமாக போதைப்பொருட்கள் புழக்கத்தை ஒழிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றார்.
கோவை போலீசார் இதை செயலில் நிகழ்த்திக்காட்டும் அந்த மகிழ்ச்சியான நாளுக்காக, கோவை மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
ரூ.1.34 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
2025ல், 324 வழக்குகள் பதியப்பட்டு, 529 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம், 366 கிலோ கஞ்சா, 696 கிராம் மெத்தாபீட்டமைன், எம்.டி.எம்.ஏ., 66.19 கிராம், கொகைன், 92.43 கிராம், ஹாசிஸ், 80 மி.லி., ஹெராயின், 5 கிராம், ஓப்பியம், 0.375 கிலோ, போதை மாத்திரைகள் 14,460 என, மொத்தம் ரூ.1.34 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

