அரசு பள்ளியில் கழிப்பறை வசதி குறைவு, மாணவியர் சுகாதாரம் கேள்விக்குறி
அரசு பள்ளியில் கழிப்பறை வசதி குறைவு, மாணவியர் சுகாதாரம் கேள்விக்குறி
UPDATED : ஜன 21, 2026 04:39 PM
ADDED : ஜன 21, 2026 04:42 PM
பொன்னேரி: பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட வேண்பாக்கம் பகுதியில், ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், ஆறு முதல் பிளஸ் 2 வரை, 1,500 மாணவியர் பயின்று வருகின்றனர்.
இங்கு, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி இல்லை. மொத்த மாணவியருக்கும், 20 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.
பெரும் இன்னல்
மத்திய அரசின் 'துாய்மை இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியான 'ஸ்வச் பாரத், ஸவச் வித்யாலாயா' திட்டத்தின் கீழ், மாணவியர் படிக்கும் பள்ளிகளில், 25 பேருக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும் என, பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த பரிந்துரையின்படி, பொன்னேரி அரசு பெண்கள் பள்ளியில், 60 கழிப் பறைகள் இருக்க வேண்டும்.
ஆனால், 75 மாணவியருக்கு ஒரு கழிப்பறை என்ற கணக்கில் உள்ளன.
அவையும், உரிய பராமரிப்பின்றி சுகாதாரமற்று உள்ளன. கழிப்பறை வளாகங்களை சுற்றிலும் செடிகள் வளர்ந்து, குப்பை குவிந்துள்ளது.
காலை, மாலை நேரத்தில் 10 நிமிட இடைவேளை தரப்படுகிறது. குறைந்த கழிப்பறை வசதியுள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் மாணவியர் இயற்கை உபாதகைகளை கழிக்க முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதனால், மாணவியரின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
அதிருப்தி
'ஸ்வச் பாரத், ஸவச் வித்யாலாயா' திட்டத்தின் பரிந்துரையும் பின்பற்றப்படாமல் இருப்பது, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கூடுதல் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

