எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மாணவர்களுக்கு வாழைப்பழம் அல்லது முட்டை
எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மாணவர்களுக்கு வாழைப்பழம் அல்லது முட்டை
UPDATED : டிச 01, 2025 08:00 PM
ADDED : டிச 01, 2025 08:01 PM
பெங்களூரு:
இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மாணவர்களுக்கு காலையில் பால், மதியம் உணவு, முட்டை அல்லது வாழைப்பழம் வழங்க, கல்வி துறைக்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடகா அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், தனியார் பள்ளிகள் போன்று, 2018 - 18 ல் கே.பி.எஸ்., எனும் கர்நாடகா பப்ளிக் பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டது. இதற்கு பெற்றோரிடம் ஆதரவு பெருகியது.
இதையடுத்து, அரசின் அங்கன்வாடிகளில் துவக்க அரசு தீர்மானித்தது. நவ., 28 முதல் மாநிலம் முழுதும் முதல்கட்டமாக 5,000 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கின. இதுவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு காலையில், மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது.
தற்போது மாநில அரசு, கல்வி துறைக்கு புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
கர்நாடகாவில் உள்ள 276 கர்நாடக பப்ளிக் பள்ளிகளில், 2018 முதல் மாணவர்கள் ஊட்டச்சத்துக்காக காலையில் ராகிமால்ட் கலந்த பால், மதிய உணவுடன் முட்டை அல்லது வாழைப்பழம் வழங்கப்பட்டு வருகிறது.
அதுபோன்று, நடப்பாண்டு 'பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான்' திட்டத்தின் கீழ், டிச., 1ம் தேதி முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வாரத்தில் ஆறு நாட்கள் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்பு மாணவர்களுக்கும் காலையில் ராகிமால்ட் கலந்த பால், மதியம் சூடான உணவு, முட்டை அல்லது வாழைப்பழம் வழங்க வேண்டும். இதன் மூலம், 1,98,270 குழந்தைகள் பயன்பெறுவர்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

