திருத்தணி அரசு மகளிர் பள்ளி கட்டடம் இடிந்து விழும் அபாயம்
திருத்தணி அரசு மகளிர் பள்ளி கட்டடம் இடிந்து விழும் அபாயம்
UPDATED : ஜன 18, 2026 02:52 PM
ADDED : ஜன 18, 2026 03:00 PM

திருத்தணி: திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேதமடைந்த வகுப்பறை கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1981ம் ஆண்டு 14 வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்த கட்டடத்தை முறையாக பராமரிக்காததால், ஒன்றரை ஆண்டுக்கு முன் கட்டடம் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. மாணவியர் யாரும் செல்லாத வகையில் பூட்டப்பட்டது.
அதற்கு பதிலாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன், 32 வகுப்பறைகள் கொண்ட இரண்டு கட்டடங்கள், ஆய்வகம், கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டன. கடந்தாண்டு மே மாதம், 2 கோடி ரூபாயில், ஆறு வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.
தற்போது பள்ளியில், 1,400க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். சேதமடைந்த கட்டடம் அருகே மாணவியர் செல்வதால், விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, சேதமடைந்த 14 வகுப்பறை கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருத்தணி பொதுப்பணித் துறை அதிகாரி கூறியதாவது:
கடந்த மே மாதம், அரசு மகளிர் பள்ளியில், 2 கோடி ரூபாயில், ஆறு வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளை பார்வையிட வந்த திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், சேதமடைந்த கட்டடம் குறித்து கேட்டறிந்தார்.
பின், கலெக்டர் கட்டடத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அனுப்ப வேண்டும் என, அறிவுறுத்தினார். தொடர்ந்து, கட்டடத்தை ஆய்வு செய்து, சேதமடைந்த கட்டடத்தை சீரமைக்க முடியாது. இடித்து அகற்ற வேண்டும் என, கலெக்டருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால், கலெக்டர் உத்தரவு பிறப்பிக்காததால் காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

