கோச்சிங் சென்டருக்கு செல்லாமலேயே யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்ற மனோஜ்
கோச்சிங் சென்டருக்கு செல்லாமலேயே யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்ற மனோஜ்
UPDATED : மார் 22, 2026 12:26 PM
ADDED : மார் 22, 2026 12:28 PM
யு.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில், 389வது ரேங்க் எடுத்து ஹாசன் மாவட்டம் சக்லேஸ்பூர் தாலுகா குர்ஜெனஹள்ளி கிராமத்தின் மனோஜ் வெற்றி பெற்று உள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றது குறித்து மனோஜ் கூறியதாவது:
என் அப்பா சோமசேகர் விவசாயம் செய்கிறார். நான் சிறுவனாக இருந்த போதே அம்மா இறந்துவிட்டார். அப்பா தான் என்னை வளர்த்தார்.
அரகலகூடு அருகே மல்லிப்பட்டணம் கிராமத்தில் துவக்க பள்ளியில் படித்தேன். மாவினகெரே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு வரை கன்னட வழியில் படித்தேன். பின், ஹாசனில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து முடித்த பின், யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராக ஆரம்பித்தேன்.
ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் கோச்சிங் சென்டருக்கு சென்று படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால், புத்தகங்களை வாங்கி வீட்டில் இருந்தே படித்தேன். இணையத்தில் கிடைக்கும் தகவல்களை சேகரித்து அடிக்கடி மாதிரி தேர்வுகளை எழுதி பார்த்தேன்.
இரண்டு முறை தேர்வில் தோல்வியடைந்த பின், மூன்றாவது முறையாக எழுதிய தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.
என் தந்தை விவசாயி என்பதால், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று என்னிடம் அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி ஏழை மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். நம் மாநிலத்திலேயே பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். மற்ற மாநிலங்களிலும் சென்று பணியாற்ற தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
