அரசு பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் பராமரிப்பு வழிகாட்டுதல் வெளியீடு
அரசு பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் பராமரிப்பு வழிகாட்டுதல் வெளியீடு
UPDATED : ஏப் 29, 2026 05:32 PM
ADDED : ஏப் 29, 2026 05:35 PM
பெ.நா.பாளையம்:
அரசு பள்ளிகளில் உள்ள திறன்மிகு வகுப்பறைகள், கம்ப்யூட்டர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும், 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே போல 6,992 அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டு உள்ளன.
திறன்மிகு வகுப்பறைக்காக ஒலி, ஒளி அமைப்புகள், இன்ட்ராக்டிவ் பிளாட் பேனல், டிஜிட்டல் கற்றல் மேலாண்மை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும் தடையற்ற இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகள், பாடப்பகுதிகளை வீடியோக்கள், முப்பரிமான 3டி அனிமேஷன் வாயிலாக எளிமையாக புரிந்து கொள்ளவும், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கவும் உதவுகிறது. தற்போது கோடை விடுமுறையாக உள்ளதால், வகுப்பறைகளின் பாதுகாப்பு பராமரிப்புக்கான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதில், பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர் திறன் பலகை (ஸ்மார்ட் போர்டு) ஆகியவற்றை முறையாக சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதே நேரத்தில் டிரிப்பர், கண்காணிப்பு கேமரா, யு.பி.எஸ்., மின் இணைப்பு மீட்டர் ஆகியவற்றை அணைக்க கூடாது.
கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், மலைச்சாரல் திறன் வகுப்பறையில் படாதவாறு கதவு மற்றும் ஜன்னல்கள் முழுமையாக மூடி வைக்க வேண்டும். மேலும், இணைய இணைப்பு மற்றும் மோடம் ஆகியவற்றையும் ஸ்விட்ச் ஆப் செய்யக்கூடாது. இவை அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

