கனியாமூர் பள்ளி கலவர வழக்கு; விழுப்புரம் கோர்ட்டில் 37 சிறார்கள் ஆஜர்
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு; விழுப்புரம் கோர்ட்டில் 37 சிறார்கள் ஆஜர்
UPDATED : பிப் 22, 2025 12:00 AM
ADDED : பிப் 22, 2025 10:31 AM
விழுப்புரம் :
கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் தொடர்புடைய 37 சிறார்கள், நேற்று கோர்ட்டில் ஆஜராகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியதில், பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து, 53 சிறார்கள் உட்பட 916 பேர் மீது வழக்குப் பதிந்தனர். அதனைத் தொடர்ந்து சிறார்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை சிறப்பு புலனாய்வு குழு, கடந்த மாதம் விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததை தெடார்ந்து வழக்கில் தொடர்புடைய 53 சிறாரில் 37 பேர் ஆஜராகினர். அவர்களுக்கு, வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 1,100 பக்க இறுதி அறிக்கை நகலை, வழக்கில் தொடர்புடையவர்களின் இ மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும், வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி (பொறுப்பு) ராதிகா உத்தரவிட்டார்.

