தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பலி
தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பலி
UPDATED : ஜன 04, 2025 12:00 AM
ADDED : ஜன 04, 2025 08:53 AM
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் 4 வயது சிறுமி தவறி விழுந்து இறந்ததை கண்டித்து நடந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதித்தது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிவேல், 34; இவரது மனைவி சிவசங்கரி, 32: இவர்களது ஒரே மகள் லியா லட்சுமி, 4; விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்தார்.
நேற்று பகல் 12.00 மணிக்கு உணவு இடைவேளையின் போது சிறுவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியே விளையாடிவிட்டு, மீண்டும் வகுப்பறைக்கு சென்றனர்.
ஆசிரியர் ஏஞ்சல், சிறுமி லியா லட்சுமி இல்லாதால் பிற வகுப்பறைகளில் தேடினார். அங்கும் இல்லாததால், சிறுவர்கள் விளையாடிய இடத்தில் தேடியபோது, அருகில் இருந்த கழிவுநீர் தொட்டி மேல் மூடி தகரம் உடைந்திருந்தது. அதன் வழியே பார்த்தபோது, கழிவுநீர் தொட்டிக்குள் குழந்தை இருந்தது தெரிய வந்தது.
உடன் பள்ளி நிர்வாகத்தினர், சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
உடன் பள்ளி நிர்வாகம், சிறுமி இறந்த தகவலை அவரது பெற்றோருக்கு தெரிவிக்காமல், பள்ளியில் படிக்கும் பிற மாணவர்களை மாலை 3:00 மணிக்கு வீட்டிற்கு அனுப்பினர். வழக்கம் போல் சிறுமி லியா லட்சுமியை அழைத்து செல்ல அவரது தாத்தா கார்மேகம் பள்ளிக்கு வந்தபோது, லியாலட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்தது தெரியவந்தது.
தகவலறிந்து திரண்ட மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சிறுமி இறந்ததாக கூறி, நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேலும், சிறுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்ததற்கான எந்த தடயமும் இல்லை. உடலில் சிராய்ப்பு காயங்கள் இல்லை. துணி ஈரமாக இல்லை. வேறு எந்த வகையிலோ சிறுமி இறந்துள்ளதை, பள்ளி நிர்வாகம் மூடி மறைப்பதாக குற்றம் சாட்டினர்.
தகவலறிந்த டி.எஸ்.பி., நந்தகுமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பள்ளியில் கூடியிருந்த பெற்றோர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அதிருப்தி அடைந்த பெற்றோர்கள் மாலை 4.15 மணிக்கு விக்கிரவாண்டி வடக்கு பைபாசில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று, 4:40 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், பைபாசில் 25 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, சி.இ.ஓ., அறிவழகன், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் உள்ளிட்டோர் சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தகுதி சான்றிதழ் வழங்கியது எப்படி
பள்ளிக்கு 4 மாதங்களுக்கு முன் தகுதி சான்று வழங்கப்பட்டுள்ளது. தகுதி சான்று வழங்கும் போது சி.இ.ஓ., தீயணைப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பள்ளியை நேரில் ஆய்வு செய்திருந்தால், கழிவுநீர் தொட்டி மூடி துரு பிடித்திருந்தது தெரிந்திருக்கும். ஆய்வு செய்யாமலேயே அதிகாரிகள் தகுதி சான்று வழங்கியதால், சிறுமி இறந்துள்ளதாக பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
ரூ.3 லட்சம் நிவாரணம்
இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.