UPDATED : ஜூலை 06, 2024 12:00 AM
ADDED : ஜூலை 06, 2024 09:57 AM

கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு, வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஈஸ்வர் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, தினமலர் பட்டம் இதழ் அளிக்கப்பட்டது.
மாணவர்கள் வாசிப்பு பழக்கம் மற்றும் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு தினமலர் சார்பில் பட்டம் இதழ் வழங்கப்பட்டு வருகிறது.
கிணத்துக்கடவு, வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஈஸ்வர் பொறியியல் கல்லூரி சார்பில், தினமலர் - பட்டம் இதழ் வழங்கப்பட்டது. பட்டம் இதழை, ஈஸ்வர் பொறியியல் கல்லூரி இயக்குனர் ராஜாராம், பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி மற்றும் மாணவர்களுக்கு வழங்கினார்.
இதே போன்று, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு அரசு துவக்கப்பள்ளி, கொண்டம்பட்டி அரசு துவக்கப்பள்ளிகளுக்கு, தினமலர் - பட்டம் இதழ் வழங்கப்பட்டது.
ஈஸ்வர் பொறியியல் கல்லூரி இயக்குனர் ராஜாராம் பேசுகையில், மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். மேலும், வாசிப்பு பழக்கம் இருந்தால் அதிகமான பயனுள்ள தகவல்களை படிக்க முடியும் மற்றும் திறமை அதிகரிக்கும்.
தினமலர் - பட்டம் இதழ் படிக்கும் போது, கற்றல் திறன் மேம்படும். அறிவியல், கணிதம் சார்ந்த பல்வேறு தகவல்கள் பெறலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக படித்தால் இளைஞர்களுக்கு எதிர் காலத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றார்.
தொடர்ந்து, தினமலர் - பட்டம் வழங்கிய கல்லூரிக்கு, பள்ளி தலைமையாசிரியர் நன்றி தெரிவித்தார்.