பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி: கவர்னர் அறிவிப்பு
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி: கவர்னர் அறிவிப்பு
UPDATED : ஆக 17, 2024 12:00 AM
ADDED : ஆக 17, 2024 11:44 AM

சென்னை:
இந்திய அரசியல்அமைப்பு தின விழா மற்றும் பாரதியாரின் 143வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, மாநில அளவிலான கட்டுரை போட்டிகளை கவர்னர் ரவி அறிவித்து உள்ளார்.
ஆண்டுதோறும் நவம்பர் 6ல் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, தமிழ் மற்றும் ஆங்கில கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.
* ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கம்; முக்கிய நிகழ்வுகளும், தலைவர்களும்; 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்பவர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சமூக நீதிக்கான பாதுகாப்பு அம்சங்கள்; கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டம் காட்டுகிற அடிப்படை கடமைகள்; உரிமைகளையும், பொறுப்புகளையும் சமநிலைப்படுத்துதல் என்ற தலைப்புகளில் கட்டுரைகளை அனுப்ப வேண்டும்.
பாரதியார் விழா
* பாரதியார் 143வது பிறந்த நாள், டிசம்பர் 11ல் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, மாநில அளவிலான கட்டுரை போட்டியை கவர்னர் அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள், வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்; பல்கலை மாணவர்கள், வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்; தேசிய சுதந்திர உணர்வில் அதன் மறுமலர்ச்சி என்ற தலைப்புகளில் கட்டுரை அனுப்ப வேண்டும்
* கையால் எழுதப்பட்ட கட்டுரையை, செப்., 15க்குள், 'துணை செயலர், பல்கலை, கவர்னர் மாளிகை, ராஜ்பவன், சென்னை - 600022' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சுய சான்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
* வெற்றியாளர்களுக்கு 2025 குடியரசு தினத்தன்று, கவர்னர் மாளிகையில் நடக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என, கவர்னர் ரவி அறிவித்து உள்ளார்.