அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க திட்டம்
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க திட்டம்
UPDATED : ஜூன் 30, 2025 12:00 AM
ADDED : ஜூன் 30, 2025 08:34 AM
கடலுார்:
கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி அரசு சார்பில் கிராமங்கள் தோறும் பள்ளிகள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடலுார் வருவாய் மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன.
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 7 வட்டாரங்கள் உள்ளன. கடலுார் கல்வி மாவட்டத்தில் மட்டும் 576 துவக்கப் பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.
ஆண்டுதோறும் துவக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் ஒன்றை இலக்க எண்ணிக்கையில் பள்ளிகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற பள்ளிகளுக்கு ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், சிற்றுண்டி வழங்குபவர்கள் என பணியில் உள்ளவர்களுக்கு சம்பளம் கொடுக்கவே ஒவ்வொரு மாதமும் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.
ஆண்டுதோறும் ஒரு சில பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்குதல், புத்தகம், நோட்டு, சீருடை, லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களையும் இலவசமாக வழங்கி ஊக்கப்படுத்துகின்றனர். அப்போதாவது மாணவர்கள் மற்ற மாணவர்களிடம் எடுத்துக்கூறி சேர்க்கைக்கு உதவுவார்கள் என ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, கடலுார் மாவட்டத்தில் 10 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் அதிகரித்து வருகின்றன. கடலுார் வட்டாரத்தில் ஈசனாங்குப்பம், சுப உப்பலவாடி, சந்திக்குப்பம், சின்ன இருசம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம் உட்பட ஒரு சில கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஓற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர்.
ஒரு சில இடங்களில் ஒன்று, இரண்டு மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் கூட உள்ளன. ஒற்றை இலக்க எண்ணிக்கையில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு அப்பள்ளிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கடலுார் வட்டாரத்தில் ஒற்றை இலக்க பள்ளிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஏற்கனவே படிக்கும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து அவர்கள் மூலமாக மற்றொரு மாணவரை இப்பள்ளிக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். கூடுதல் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேறு என்ன முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.