கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு
கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு
UPDATED : ஆக 22, 2014 12:00 AM
ADDED : ஆக 22, 2014 10:46 AM
புதுச்சேரி: அரசு கலை கல்லுாரி மாணவர் சேர்க்கை, கலந்தாய்வில் பங்கேற்க, மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள 6 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் உள்ள, 2108 இடங்களுக்கான ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடந்து வருகிறது. இதுவரை, நடத்தப்பட்ட 7 கட்ட கலந்தாய்வில், 1730 இடங்கள் நிரம்பி, 378 இடங்கள் காலியாக உள்ளன.
ஆகஸ்ட் மாதத்திற்குள், கல்லுாரிகளில் காலியாக உள்ள, அனைத்து இடங்களையும் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 8வது கலந்தாய்வு இன்று(22ம் தேதி) நடக்கிறது. கடிதம் மூலம் தகவல் தெரிவித்தால், காலதாமதம் ஏற்படும் என்பதால், கலந்தாய்வில் பங்கேற்கும் 188 மாணவர்களுக்கு, டெலிபோன் வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் கல்லுாரியில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு பட்டியல் bgwc.puducherry.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
