அரசு பள்ளிகளில் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் ஆய்வு
அரசு பள்ளிகளில் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் ஆய்வு
UPDATED : நவ 19, 2014 12:00 AM
ADDED : நவ 19, 2014 03:36 PM
விருதுநகர்: விருதுநகர்மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்ட நிதி மூலம் அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.
மாவட்டத்தில் 177 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம்(ஆர்எம்எஸ்ஏ) நிதிமூலம் பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் 38 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், 18 பள்ளிகளில் கழிப்பறைகள், 10 பள்ளிகளில் குடிநீர் வசதி செய்துதரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி, பணிகள் நடந்துள்ள விதம், தரம் ஆகியவை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் கோவிந்த அரசன், பூபால பாலகிருஷ்ணன் நேற்றுமுன்தினம் ஆய்வை துவக்கினர்.
பத்து நாட்கள் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை அந்த அமைச்சகத்திடம் சமர்ப்பிப்பர் என, மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

