பெங்களூரு: நல்லாசிரியர் விருது வழங்கி முதல்வர் வாழ்த்து
பெங்களூரு: நல்லாசிரியர் விருது வழங்கி முதல்வர் வாழ்த்து
UPDATED : செப் 06, 2023 12:00 AM
ADDED : செப் 06, 2023 11:10 AM
பெங்களூரு:
நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள் ஆசிரியர்கள். விவசாயிகள், ராணுவ வீரர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஒரு சிறந்த சமுதாயத்தின் துாண்கள். கல்வியின் நோக்கம் அறிவை கற்பிப்பது அல்ல. குழந்தைகளை நல்ல மனிதர்களாக உருவாக்குவதே ஆகும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். 43 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார்.பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறையும், உயர்கல்வித் துறையும் இணைந்து ஆசிரியர் தின விழாவை, பெங்களூரு விதான் சவுதா மாநாட்டு அரங்கில் நேற்று கொண்டாடின. விழாவை முதல்வர் சித்தராமையா துவக்கிவைத்தார். சிறப்பாக பணிபுரிந்த 43 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவித்தனர்.விழாவில், சித்தராமையா பேசியதாவது:
ஒருவர் பட்டம், முனைவர் பட்டம் பெற்றாலும், அறிவியல் மனப்பான்மையும், பகுத்தறிவும் வளரவில்லை என்றால் நன்கு படித்தவர் என்று சொல்ல முடியாது. பட்டம் பெற்ற பலர் ஜாதி வெறியர்களாக மாறுகின்றனர் என்றால், அவர்கள் ஏன் கல்வி கற்க வேண்டும்? நமது அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் கல்வி கற்பதற்கான வாய்ப்பை வழங்கியது. இப்போது இந்த அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது. எனவே, அரசியலமைப்பை பாதுகாக்கும் பொறுப்பு, நம் அனைவருக்கும் உள்ளது.சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகியும் 100 சதவீதம் கல்வியறிவைப் பெற முடியவில்லை. கல்வியை இழந்தவர்கள், சமத்துவமின்மையால் பாதிக்கப்படுகின்றனர். நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவு நனவாக வேண்டுமானால், அனைவரும் அறிவியல் மற்றும் அறிவுசார் கல்வி பெற்று நாடு முன்னேற்றப் பாதையில் முன்னேற வேண்டும். ஆசிரியர் பணியில் சேரும்போது அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான பயிற்சி உள்ளது. ஆனால், ஒவ்வொரு மாவட்டத்தின் தேர்வு விகிதமும், கல்வி தரமும் ஏன் மாறுபடுகிறது என்று ஒவ்வொரு ஆசிரியரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.விவசாயிகள், ராணுவ வீரர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஒரு சிறந்த சமுதாயத்தின் துாண்கள். சமுதாயம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள் ஆசிரியர்கள். இந்த அரசு வந்த பிறகு 10 ஆயிரம் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்துள்ளோம். எங்கள் ஆட்சியில் தான், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு மடிகணினி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தோம். தொடங்கினோம். பின்னர் வந்த அரசு அதை நிறுத்தியது. தற்போது மீண்டும் அத்திட்டம் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் மது பங்காரப்பா, உயர்கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர், சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
