கல்வி கேந்திரமாக புதுச்சேரி மாறியுள்ளது: முதல்வருக்கு பாராட்டு
கல்வி கேந்திரமாக புதுச்சேரி மாறியுள்ளது: முதல்வருக்கு பாராட்டு
UPDATED : செப் 06, 2023 12:00 AM
ADDED : செப் 06, 2023 11:07 AM
புதுச்சேரி:
கல்விக்காக அதிக நிதியை அரசு ஒதுக்கீடு செய்வதால், கல்விக் கேந்திரமாக புதுச்சேரி மாறி உள்ளது என அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறினார்.அவர் நேற்று அளித்த பேட்டி:
புதுச்சேரியில், மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், புதுச்சேரியில் 10 சதவீதம் என்பது முதல்வர் ரங்கசாமி எடுத்த முயற்சியால் சாத்தியமாகி உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன், காலை உணவு திட்டத்தையும், பின் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்தவர் ரங்கசாமி. இதன் எதிரொலியாக, ஏழை, மக்களின் டாக்டர், இன்ஜினியர் கனவு நிறைவேறி வருவதுடன், பள்ளிகளில் இடை நிற்றல் குறைந்துள்ளது; பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கல்விக்கு 7 சதவீதம் நிதி ஒதுக்கீடு தரலாம் என கோத்தாரி கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், நாட்டிலேயே அதிக சதவீதமாக புதுச்சேரியில் 12 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், கல்விக் கேந்திரமாக புதுச்சேரி மாறி உள்ளது. புதுச்சேரி மாநில அரசு நடத்தும் பள்ளிகளில் 1ம் வகுப்பில் இருந்து, 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மட்டும் 10 சதவீத உள் ஒதுக்கீடு கிடைக்கும். முதல்வர் ரங்கசாமிக்கு, என்.ஆர். காங்., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் புதுச்சேரி மக்கள் சார்பில் நன்றியும், பாராட்டும் தெரிவித்து கொள்கிறோம் என்றார்.கடந்த காங்., அரசு, உள் ஒதுக்கீடு தொடர்பாக அனுப்பிய கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லையே? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் லட்சுமிநாராயணன், மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் தரவில்லை என எனக்கு தகவல். அமைச்சரவையை கூட்டி 10 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக நாங்கள் முடிவு எடுத்தோம். கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி, மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டது. மேலும், மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு சரியான விளக்கத்தை அளித்தோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், முதல்வர் ரங்கசாமி நேரடியாக பேசினார். சுகாதார அமைச்சகத்திலும் பேசினார். இதை தொடர்ந்து, மத்திய அரசு அனுமதி வழங்கியது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
