UPDATED : பிப் 18, 2024 12:00 AM
ADDED : பிப் 18, 2024 08:31 AM
திருவாடானை:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பாசிப்பட்டினம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவனை அடித்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் செய்யப்பட்டதால் வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.தொண்டி அருகே பாசிப்பட்டினத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 300 மாணவர்கள் படிக்கின்றனர். அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவரை சரியாக படிக்கவில்லை என, தலைமையாசிரியர் சுப்பிரமணியன் அடித்துள்ளார்.இதில் மாணவன் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தொடக்கப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜிடம் மாணவரின் தாய் புகார் செய்தார். திருவாடானை வட்டார கல்வி அலுவலர்கள் நேற்று முன்தினம் அப்பள்ளியில் விசாரணை செய்தனர்.பள்ளி மேலாண்மைக் குழு தலைவி பரக்கத்நிஷா கூறியதாவது:
தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மாணவரை கன்னத்தில் அடித்துள்ளார். இவர் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு வருவதில்லை. வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது மேஜையில் படுத்து துாங்குகிறார். அதற்கு ஆதாரமாக போட்டோ உள்ளது.பள்ளியை சுத்தப்படுத்தும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துகிறார். இத குறித்து ஏற்கனவே பலமுறை கல்வி அலுவலர்களிடம் புகார் செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.சுப்பிரமணியன் கூறுகையில், மாணவரை மிரட்டத்தான் செய்தேன். பொய் புகார் கூறுகின்றனர். பள்ளியில் துாங்கவில்லை. மாணவர்களை வேலை வாங்குவதில்லை என்றார்.