ஊரக இளைஞர்களுக்கான திறன் பயிற்சி: தமிழகத்தில் 1,333 பேர் பயனடைந்தனர்
ஊரக இளைஞர்களுக்கான திறன் பயிற்சி: தமிழகத்தில் 1,333 பேர் பயனடைந்தனர்
UPDATED : டிச 17, 2025 07:50 AM
ADDED : டிச 17, 2025 07:52 AM
சென்னை:
ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கான குறுகிய கால திறன் அடிப்படையிலான பயிற்சிகள், ஊரகப் பகுதி இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்தார்.
மக்களவையில் உறுப்பினர் ஏ. மணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 2015-16ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊரக இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளதாக கூறினார். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் 2020-21 முதல் 2024-25 வரை 9 திறன் பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டு, 220 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 2021-22ஆம் ஆண்டில் 56 பேரும், 2022-23ஆம் ஆண்டில் 28 பேரும், 2023-24ஆம் ஆண்டில் 28 பேரும், 2024-25ஆம் ஆண்டில் 56 பேரும் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், 2024-25 நிதியாண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 1,333 பேர் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றுள்ளதாக அமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்தார்.

