ஆதிதிராவிடர் விடுதி மாணவர் பணம் கையாடல் 3 தாசில்தார்களுக்கு சிக்கல்
ஆதிதிராவிடர் விடுதி மாணவர் பணம் கையாடல் 3 தாசில்தார்களுக்கு சிக்கல்
UPDATED : நவ 24, 2023 12:00 AM
ADDED : நவ 24, 2023 07:40 PM
சிவகங்கை:
சிவகங்கை ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கான சோப்பு, தேங்காய் எண்ணெய் தொகைக்கான பணம் கையாடலில் 3 தாசில்தார்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 46 இடங்களில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் விடுதி செயல்படுகிறது. இங்கு தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாதந்தோறும் சோப்பு, தேங்காய் எண்ணெய் வாங்கி கொள்ள அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதியை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகம் மூலம் மாணவர் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும்.2017 முதல் 2023 ஏப்., வரை அரசு வழங்கிய பல கோடி ரூபாய் நிதியை மாணவர்களுக்கு வழங்காமல் கையாடல் செய்ததாக, கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் பூமிநாதன், முன்னாள் உறுப்பினர் பி.ராமு புகார் அளித்தனர். கலெக்டரின் பி.ஏ.,( கணக்கு) தலைமையில் குழு அமைத்து விசாரித்து அறிக்கை வழங்க கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.இந்த விசாரணையின் முதற்கட்ட அறிக்கைபடி ரூ.2.35 கோடி வரை வருவாய் ஆய்வாளர் சீதா பிரியா, அவரது கணவர் உட்பட பலரது வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்ததும் ஆதிதிராவிடர் நல விடுதி வார்டன், ஊழியர்களின் சேமநல நிதி கணக்கில் வரவு வைக்க வேண்டிய தொகை பல லட்ச ரூபாய் கையாடல் செய்ததும் உறுதியானது. இதையடுத்து சீதா பிரியா, ராம்குமார் கைது செய்யப்பட்டனர்.சிக்கும் தாசில்தார்கள்
2017 முதல் 2023 ஏப்., வரை 7 பேர் அத்துறையின் தனி தாசில்தாராக இருந்துள்ளனர். அவர்களில் 4 பேர், மாணவர்களுக்கு பணம் அனுப்பும், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,) திட்ட கணக்கிற்குள் செல்வதற்கான பாஸ்வேர்டை தங்களது நேரடி கண்காணிப்பில் வைத்திருந்துள்ளனர்.மற்றவர்கள் சீதா பிரியாவிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தான் சீதாபிரியா மாணவர் கையாடல் செய்தது அம்பலமாகியுள்ளது. எனவே முறைகேட்டில் தாசில்தார்களுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
