கஞ்சா விற்பனை, வழிப்பறி, அடிதடி; 6 கல்லுாரி மாணவர்கள் உட்பட ஏழு பேர் கைது
கஞ்சா விற்பனை, வழிப்பறி, அடிதடி; 6 கல்லுாரி மாணவர்கள் உட்பட ஏழு பேர் கைது
UPDATED : நவ 16, 2024 12:00 AM
ADDED : நவ 16, 2024 10:38 AM
கோவை:
சிங்காநல்லூர், அரவான் திருவிழா நடக்கிறது. திருவிழாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் சென்றனர். அவர்களின் இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட் கர்சீப் வைத்து மறைக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்த போலீசார் வாகனத்தில் துரத்தி சென்றனர். அவர்கள் தங்கியிருக்கும் அறையை கண்டு பிடித்து சென்றனர். அப்போது, உள்ளே ஏழு பேர் இருந்தனர்.
போலீசார் அவர்களின் அறையில் சோதனை நடத்தியபோது, கத்தி, 1.2 கிலோ கஞ்சா உள்ளிட்டவை சிக்கியது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்களில், தென்காசியை சேர்ந்த மாதேஷ், 19, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் குமார், 19, திருப்பூரை சேர்ந்த ஹரி நாராயணன், 19, சிவகங்கையை சேர்ந்த ஆதித்யா, 19, கடலுாரை சேர்ந்த துஷ்யந்த், 19 சென்னையை சேர்ந்த நவீன், 24 ஆகிய ஆறு பேர் கோவையில் ஒரு தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
இவர்கள் சவுரிபாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். மேலும் இவர்களுடன் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ராமநாதபுரத்தை சேர்ந்த தினேஷ், 24 தங்கியுள்ளார்.
இவர்கள் வாரத்தில் இரு முறை தேனிக்கு பைக்கில் சென்று கஞ்சா வாங்கி வந்து கோவையில் கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் பணம் இல்லாத நேரத்தில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சரவணம்பட்டி போலீசார் ஏழு பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
துணை கமிஷனர் ஸ்டாலின் தெரிவிக்கையில், கல்லுாரிகளில் இது போன்ற மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமால் விட்டு விடுகின்றனர். நிர்வாகத்தினரிடம் தெரிவித்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.
மேலும் எந்த கல்லுாரி மாணவர்கள் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனையில் ஈடுபடுகிறார்களோ அந்த கல்லுாரி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றார்.

