நோபல் பரிசு: ராமகிருஷ்ணனின் ஆசிரியர்கள் நெகிழ்ச்சி
நோபல் பரிசு: ராமகிருஷ்ணனின் ஆசிரியர்கள் நெகிழ்ச்சி
UPDATED : அக் 08, 2009 12:00 AM
ADDED : அக் 08, 2009 11:47 AM
சிதம்பரம்: ‘வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு கிடைத்த செய்தி கேட்டு நெகிழ்ந்து போனேன்’ என, அவரது ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த விஞ்ஞானி வெங்கட்ராம ராமகிருஷ்ணனுக்கு, பாடம் சொல்லிக் கொடுத்த சிதம்பரம் விலங்கியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் பேராசிரியர் கோவிந்தராஜன் (82), ராமகிருஷ்ணன் தோழி ராதிகா, பேராசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் கோவிந்தராஜன்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் பாடம் சொல்லிக் கொடுத்த மாணவர் ராமகிருஷ்ணன், நோபல் பரிசு பெற்றுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. வேறு எந்த ஆசிரியருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. அந்த மாணவர் வகுப்பில் முதல் மாணவர் என்று சொல்ல முடியாது. வகுப்பில் நன்றாக படிக்கும் 10 மாணவர்களில் ஒருவராக இருப்பார். ஆனால், கடமை உணர்வோடு இருப்பவர், திறமையானவர். அதனால், அவருக்கு அந்த விருது கிடைத்துள்ளது. ராமகிருஷ்ணன் படித்து 40 ஆண்டாவதால் அவரை பற்றி ஓரளவிற்குதான் எனக்கு ஞாபகம் உள்ளது. நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணனுக்கு நான் பாடம் சொல்லிக் கொடுத்தேன் என்பது எனக்கு கிடைத்த பெருமை. நிச்சயமாக தொலைபேசி மூலம் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிப்பேன்.
ராமகிருஷ்ணனின், அண்ணாமலை பல்கலைக்கழக வகுப்புத் தோழி டாக்டர் ராதிகா: ‘எனது தந்தை கோவிந்தராஜனிடம் நானும், ராமகிருஷ்ணனும் படித்தோம். ஆனால், பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், எனக்கு எதுவும் சரியாக ஞாபகம் இல்லை. என்னுடன் படித்தவர் நோபல் பரிசு பெற்றார் என்பதே, எனக்கு பெருமையாக உள்ளது’ என்றார்.
பேராசிரியர் சண்முகசுந்தரம்: ராமகிருஷ்ணனுக்கு கல்லூரியில் இயற்பியல் பாடம் எடுத்தேன். இருந்தாலும் எனக்கு அப்போதைய ஞாபகம் எதுவும் இல்லை.என்னிடம் படித்த மாணவர், நோபல் பரிசு பெற்றார் என்ற செய்தி எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு ஆசிரியருக்கு மாணவனால் கிடைத்த பெருமை என்றே நினைக்கிறேன். அவர் மேலும் உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
