UPDATED : அக் 12, 2023 12:00 AM
ADDED : அக் 12, 2023 12:06 PM
சென்னை:
எழுதியவருக்கு பின்னும் வாழ்வதே, நல்ல எழுத்து, என முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு பேசினார்.எழுதுக அமைப்பின் சார்பில், 120 மாணவர்கள் உட்பட, 150 இளம் படைப்பாளர்கள் எழுதி, ஒன்பது பதிப்பாளர்கள் பதிப்பித்த, 150 புத்தகங்களை, முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு, சென்னையில் நேற்று வெளியிட்டார்.அவர் பேசியதாவது:
இங்குள்ள இளம் படைப்பாளர்கள் அறிவியல், வரலாறு, உடற்செயலியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புனைவாகவும், அபுனைவாகவும் நுால்களை எழுதி உள்ளனர். இது மிகவும் ஆரோக்கியமான விஷயம்.நான், கல்லுாரியில் படித்த போது கவிதை நுாலை வெளியிட பொருளாதார வசதி இல்லாமல் தவித்தேன். பின் இதழ்களுக்கு அனுப்பி விட்டு, வருமா வராதா என்ற தவிப்போடு காத்திருந்து, அவற்றை அச்சில் பார்த்து மகிழ்ந்து, முகர்ந்து சுகம் அடைந்திருக்கிறேன்.மொபைல் போன்களை பயன்படுத்துவதை விட்டுவிட்டு, நகரப்பேருந்து, ரயில்கள், மருத்துவமனைகளில் உள்ள சாமானியர்களை கவனியுங்கள். அவர்களின் வாழ்வியலில் ஏராளமான கதைகள் உள்ளன.அவற்றில் எதை எழுத வேண்டும் என்பதை தீர்மானித்த பின், சுவாரஸ்யமாக எழுதுவது பற்றி பலமுறை சிந்தித்து எழுதுங்கள். எழுத்தை மீண்டும் மீண்டும் படித்தும், நல்ல நண்பர்களிடம் காட்டியும் செம்மையாக்குங்கள்.எழுத்தால் மகிழ்ச்சி கிடைக்கும். ஆளுமைத் தன்மை வெளிப்படும். நல்ல எழுத்து, எழுத்தாளனுக்குப் பின்னும் வாழும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பன்னாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்தவரும், அப்துல் கலாமின் பேரனுமான ஷேக் தாவூத், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வெற்றிச்செல்வி, எழுதுக அமைப்பைச் சேர்ந்த விஜயகிருஷ்ணன், சுகுமாறன், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
