UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:18 AM
சென்னை:
ஊரகப்பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்க, உணவுப் பொருட்கள் வைக்க போதுமான இடவசதி ஏற்படுத்தி தரும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தி, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும், முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, காலை உணவு வழங்கப்படுகிறது.தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் இயங்கி வரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 2.50 லட்சம் மாணவர்களுக்கும், வரும் கல்வியாண்டு முதல் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப் படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துஉள்ளார்.சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வி துறை இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன.காலை உணவு வழங்க தேர்வு செய்யப்பட்ட, அரசு உதவி பெறும் பள்ளி களில், தனியாக உணவுப் பொருட்கள் வைக்க, சமையல் செய்ய, தேவையான இடவசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், திட்டத்தை செயல்படுத்தவும், முழு ஒத்துழைப்பு வழங்கும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர் அல்லது தலைமை ஆசிரியர்களை, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.