UPDATED : ஜூன் 08, 2024 12:00 AM
ADDED : ஜூன் 08, 2024 07:34 PM
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்படும் மேஜைகள் தரமில்லாமல் சில மாதங்களிலேயே உடைந்து விடுவதாக பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.
இத்தாலுகாவில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் தகரத்தால் ஆன மேஜைகள் வழங்கப்படுகின்றன. இவை மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்ட நிதிகளைக் கொண்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போல் வழங்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிக கனமுள்ள, தரமான தகர மேஜை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. அவை இன்று வரை பயன்பாட்டில் உள்ளது.
ஆனால் சில வருடங்களாக மிகவும் மெல்லிய தகரத்தால் செய்யப்பட்ட மேஜைகள் பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றன. இவை வந்த ஓரிரு மாதங்களிலேயே உடைந்து பயன்பாடு இல்லாமல் போய்விடுகிறது. இதனால் மாணவர்கள் மீண்டும் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே பள்ளிகளுக்கு தரமான மேஜைகளை சப்ளை செய்ய பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.