வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
UPDATED : ஜூலை 07, 2025 12:00 AM
ADDED : ஜூலை 07, 2025 08:57 AM

சென்னை:
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தோருக்கு, தற்காலிக தகுதி சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து, சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் வெளிநாட்டு பிரிவு சார்பில், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மருத்துவ மாணவர்கள் சங்க வெளிநாட்டு பிரிவு நிர்வாகி வசந்த் பிலிப்ஸ் அபிஷேக் கூறியதாவது:
எம்.பி.பி.எஸ்., முழு நீட் தேர்ச்சி பட்டியல்... வெளியீடு; விண்ணப்ப விநியோகம் இன்று தெரியும்
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 1,400 மாணவர்கள், வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்து தமிழகம் திரும்புகின்றனர். அவர்கள் இந்தியாவில் தேர்வு எழுதி தகுதி பெற்றதும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங் சார்பில், தற்காலிக தகுதி சான்றிதழ் வழங்கப்படும்.
இதன் பிறகே, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் தடையில்லா சான்று பெற்று, மருத்துவமனைகளில் ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்ற முடியும். மேலும், நிரந்தர டாக்டராகவும் பதிவு செய்ய முடியும்.
கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக, தற்காலிக தகுதி சான்று பெற பதிவு செய்து காத்திருக்கிறோம். ஆனால், பணம் கொடுத்தால் தான் சான்று கிடைக்கும் என்ற சூழல் உள்ளது. இதை கண்டித்து தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.