வேளாண் பல்கலை மாணவர்கள் விவசாயிகளிடம் விழிப்புணர்வு
வேளாண் பல்கலை மாணவர்கள் விவசாயிகளிடம் விழிப்புணர்வு
UPDATED : பிப் 02, 2026 07:58 PM
ADDED : பிப் 02, 2026 08:00 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வேளாண் மாணவர்கள், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கோவை வேளாண் பல்கலை தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நான்காம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவியர், பொள்ளாச்சி வட்டாரத்தில் தங்கி தோட்டக்கலை பயிற்சி பெற்று வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, ஜலத்துார் விவசாயி ராம பிரதிஷ் தோட்டத்தில் தென்னை டானிக் கட்டும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மேலும், அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கினர். தென்னை டானிக் என்பது ஊட்டச்சத்து திரட்டி மற்றும் நோய் எதிர்ப்பு ஊக்கியாக தென்னை மரங்களுக்கு செயல்படும்.
இந்த டானிக் வாயிலாக தென்னையில் மகசூல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். நீண்ட கால பயிர் பாதுகாப்பு கிடைக்கும் என விளக்கம் அளித்தனர்.
* கோவை வேளாண் பல்கலை மாணவர்கள், வடக்கிப்பாளையம், எஸ்.புரவிபாளையம் கிராம விவசாயிகளிடம் தென்னைக்கு தேவையான ஊட்டச்சத்துகள், வளர்ச்சி ஊக்கிகள் கலந்த தென்னை டானிக் குறித்து விளக்கம் அளித்தனர்.
குரும்பல் உதிர்வதை குறைத்தல், காய்கள் பெரிதாகி பருப்பு எடை கூட்டுதல், விளைச்சலை, 20 சதவீதம் வரை அதிகரித்தல் போன்ற பல பயன்களை தரும் என விளக்கமளித்தனர். மேலும், டானிக் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினர்.
* மண்ணுார் கிராமத்தில் கோவை வேளாண் பல்கலை தோட்டக்கலை கல்லுாரி மாணவியர், ஊரக பணி குழு பங்கேற்பு ஊரக மதிப்பீடு பணிகளை மேற்கொண்டனர். இதன் வாயிலாக, கிராமத்தின் விவசாய நிலை, இயற்கை வளங்கள், பயிர் முறை, நீர்வளம், சமூக பிரச்னைகள், தேவைகள் குறித்து கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

