எழுத்துத் தேர்வுக்குப் பிறகு பிளஸ் 2 செய்முறைத் தேர்வு சரியா?
எழுத்துத் தேர்வுக்குப் பிறகு பிளஸ் 2 செய்முறைத் தேர்வு சரியா?
UPDATED : செப் 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அவ்வாறு நடத்தினால் விடைத்தாள் திருத்தும் பணியில் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், முதலில் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். இந்தத் தேர்வுகள் முடியும் வரை மாணவர்கள் ஒழுங்காக பள்ளிகளுக்கு வருவர். செய்முறைத் தேர்வு முடிந்துவிட்டால் அதற்குப் பிறகு, பெரும்பாலான மாணவர்கள் பள்ளி பக்கம் தலை காட்டுவது கிடையாது.
செய்முறைத் தேர்வு முடிந்த பிறகு, எழுத்துத் தேர்வுக்குத் தயாராக வேண்டியிருப்பதால் பள்ளிக்குச் செல்வதை மாணவர்கள் விரும்புவதில்லை. தேர்வு நெருக்கத்தின்போது, தேர்வு தொடர்பான ‘டிப்ஸ்’களை மாணவர்களுக்கு தர முடியாமல் ஆசிரியர்கள் வருத்தப்படுகின்றனர்.
எழுத்துத் தேர்வு துவங்கும் வரை மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பது ஆசிரியர்களின் வாதமாக இருக்கிறது. மாணவர்களும் இதே கருத்தைக் கொண்டிருக்கின்றனர். மாணவர்கள், ஆசிரியர்களிடையே உள்ள இந்த கருத்து குறித்து, துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிகாரிகள் மட்டத்தில் பல முறை விவாதித்து, கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம், பொதுத் தேர்வு துவங்குவதற்கு முன்னும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர், ‘பிளஸ் 2 செய்முறைத் தேர்வை, எழுத்துத் தேர்வுக்குப் பின் நடத்துவது குறித்து, அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும்’ என்றார். நடப்பு கல்வியாண்டுக்கான செய்முறைத் தேர்வு துவங்குவதற்கு இன்னும் நான்கு மாதமே இருப்பதால், அது குறித்த பேச்சு தற்போது பரவலாக எழுந்துள்ளது.
இது குறித்து தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
செய்முறைத் தேர்வு, வழக்கமாக பிப்ரவரியில் நடைபெறும். இதற்கான அறிவிப்பு, ஜனவரியில் வெளியாகும். வரும் ஆண்டுக்கான செய்முறைத் தேர்வு, எழுத்துத் தேர்வுக்குப் பிறகு நடைபெறுமா என்பது குறித்து இப்போதே கூற முடியாது.
எழுத்துத் தேர்வுக்குப் பிறகு செய்முறைத் தேர்வு நடத்துவதில் ஒரு பிரச்னை இருக்கிறது. வழக்கமாக எழுத்துத் தேர்வு முடிந்தால், உடனடியாக விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். தேர்வு நடந்து கொண்டிருக்கும்போதே, முதலில் நடந்த மொழிப்பாட விடைத்தாள்கள் திருத்தப்படும்.
விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து, தேர்வு முடிவுகளை வெளியிடுவது வரை ஏராளமான பணிகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சரியாக திட்டமிட்டு, ஒரு நாளைக் கூட வீணாக்காமல் பகல், இரவு பார்க்காமல் பணி நடந்தால் தான், மே இறுதியில் முடிவுகளை வெளியிட முடிகிறது.
அப்படியிருக்கும்போது, எழுத்துத் தேர்வுக்குப் பிறகு செய்முறைத் தேர்வு நடந்தால் அதற்கு பல நாட்கள் தேவைப்படும். அந்தப் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுவதால், விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கும்.
எழுத்துத் தேர்வுக்குப் பிறகு செய்முறைத் தேர்வை நடத்துவது குறித்து அரசு கருத்து கேட்டால், விரிவாக அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
எழுத்துத் தேர்வுக்குப் பிறகு செய்முறைத் தேர்வு நடத்துவது, தேர்வு முடிவுகளை குறித்த தேதிக்குள் வெளியிட முடியாத நிலை ஏற்படும் என்றும் தேர்வுத் துறை கூறுகிறது.
எனினும், மாணவர்கள், ஆசிரியர்களின் தொடர்ச்சியான வலியுறுத்தல் காரணமாக, அவர்களின் நலனை கருத்தில்கொண்டு, செய்முறைத் தேர்வு கடைசியில் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வெளியாகலாம்.
உயிரியல்-விலங்கியல் செய்முறையில் மாற்றம்: பிளஸ் 2 வேதியியல் செய்முறைத் தேர்வில், இரண்டு உப்புகளை பயன்படுத்தி செய்யும் செய்முறை தேர்வில் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண உப்பை மட்டும் பயன்படுத்தி அமிலங்களை கண்டுபிடிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, உயிரியல் - விலங்கியல் (பயோ-கெமிஸ்ட்ரி) பாட செய்முறையிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘உமிழ் நீரில் இருந்து அமைலேசின் செயல்படும் விதம் மற்றும் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு எப்படி செயல்படுகிறது’ என்ற கேள்வி கேட்கப்படும்.
இதற்கு, மாணவர்கள் தங்களுடைய எச்சிலை பயன்படுத்தி செய்முறையை செய்தனர். இந்த முறை அருவருப்பாக இருப்பதாக மாணவர்கள் கருதியதால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாணவர்களுக்கு மாதிரி உணவுக் கரைசல் கொடுக்கப்படும். அதை வைத்து, குளுக்கோஸ், ஸ்டார்ச் உள்ளனவா என்பதை மாணவர்கள் கண்டறிய வேண்டும். இந்த புதிய நடைமுறை, வரும் செய்முறைத் தேர்வில் நடைமுறைக்கு வரும்.
