UPDATED : ஜூன் 22, 2011 12:00 AM
ADDED : ஜூன் 22, 2011 12:12 PM
அழகப்பா பல்கலையில் இசை பயிலும் மாணவர்களின் நலன் கருதி, 60 லட்ச ரூபாய் செலவில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோ, ஆடியோ படப்பிடிப்பு அரங்கம் (ரெக்கார்டிங் தியேட்டர்) துவக்கப்படவுள்ளதாக, துணைவேந்தர் சுடலைமுத்து பேசினார்.
அழகப்பா பல்கலை நுண்கலை மையம் சார்பில், உலக இசை நாள் விழா காரைக்குடியில் நடந்தது. துணை வேந்தர் சுடலைமுத்து தலைமை வகித்து பேசுகையில், "உலகத்தில் கிரேக்கம், ரோம், இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே தொன்மையான இசையை பயிற்றுவிக்கின்றன. இதில், தமிழ் இசை மிகவும் தொன்மையானது. இதற்கென தனிச் சிறப்பு உண்டு. நமது சங்கீதம், ராகம் சார்ந்த சங்கீதம். மேற்கத்திய இசைகளில் இந்த ராகம் கிடையாது.
இப்பல்கலையில் நுண்கலை மையம் சார்பில் நடனம், வாய்ப்பாட்டு, இசை பயிற்றுவிக்கப்படுகிறது. இம்மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பாடலை பதிவு செய்து, அவர்களே கேட்கும் படியான வசதி, விரைவில் செய்யப்படவுள்ளது.
அதன்படி, 60 லட்ச ரூபாய் செலவில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோ, ஆடியோ படப்பிடிப்பு அரங்கம் பல்கலையில் விரைவில் துவக்கப்படவுள்ளது, என்றார்.
டாக்டர். எம். பாலமுரளிகிருஷ்ணா, விபஞ்சி நாட்டியாலயா இயக்குனர் கலைமாமணி சரஸ்வதி, புதுச்சேரி இசை ஆய்வறிஞர் சுந்தரம், தமிழ் இசை சங்க தலைவர் சொக்கலிங்கம், நுண்கலை மைய இயக்குனர் சரளா பங்கேற்றனர். பதிவாளர் மணிமேகலை நன்றி கூறினார்.
